குரு பெயர்ச்சி பலன்கள் - 2015

ஜோதிடத்தில் பொதுவாக குருவும்
சுக்கிரனும் சுப கிரகங்களாக
கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன்
வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை
அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித
செல்வத்திற்க்கு காரகர் குரு பொது
செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு
பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும்
தன்மையுடையதாகிறது.

குரு பகவான் கொடுக்கும் பலன்களைத்
தெரிந்து கொள்வோம். குரு பகவான் தெய்வீக
அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ
வளத்திற்க்கும் பொருள் சேமிப்பிற்கும் சகல
சௌபாக்கியத்திற்க்கும் புத்திர
பாக்கியத்திற்க்கும் அன்பிற்கும் பண்பிற்கும்
காரகராகவும் ஓளிபடைத்த மேதைகளையும்,
ஞானிகளையும் உருவாக்குபவராகவும்
தலைவணங்காத தலைமைப் பதவியைத்
தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச்
செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக
திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார்,
நல்லோருடன் சேர வைப்பார். புது புது
உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக
சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார்.
புத்திரகாரகன் என்பதால் ஐந்தாம் வீட்டில் குரு
இருந்தால் புத்திரர்களால் கஷ்டத்தையும்
உருவாக்குவார்.
குரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்து இவரது
திசை இளமையில் வந்தால் கல்வியில்
முதன்மை நிலை உண்டாகும். நடு வயதில்
வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும்.
இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள்
செழிப்பார்கள். கோசாரத்தில் குரு இருக்கும்
ஸ்தானத்திற்கு ஐந்தில் சூரியன் வரும்
பொழுது வக்கிர கதி ஏற்படும். ஒன்பதில் வரும்
பொழுது வக்ர நிவர்த்தி ஏற்படும்.
ஜாதகர் பிறக்கும் பொழுது குரு
வக்கிரத்தில் இருந்தால் குரு வக்கிரம்
அடையும் பொழுது அதிக நன்மைகளை
ஏற்படும். பொதுவாக குரு இருக்கும் இடம்
கெட்டுப்போகும், பார்க்கும் இடங்கள் பலம்
பெறும். சனி இருக்கும் இடம் பலம் பெறும்,
பார்க்கும் இடம் கெடும்.
பொதுவாக ஜனன லக்கினம், சந்திரன்
இருக்கும் ராசி, ஜாதகத்தில் குரு இருக்கும்
இடத்தில் இருந்து 2-5-7-9-11 ஆகிய இடங்களில்
கோசாரத்தில் குரு வந்தால் யோகம் தரும். பிற
ஸ்தானங்களான 1-3-4-6-8-10-12 ஆகிய
ஸ்தானங்களில் குரு வரும் போது தீய
பலனைத் தருவார் என்பது நூல்களின்
கருத்து.
குரு பார்வை படும் ஸ்தானங்கள் பலம் பெரும்.
குரு தான் இருக்கும் ஸ்தானங்களிலிருந்து
ஐந்து,ஏழு மற்றும் ஒன்பது ஆகிய
ஸ்தானங்களைப் பார்வையிடுவார். குரு
சிம்மத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக
தனுசு ராசியையும் ஏழாம் பார்வையாக
கும்பம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக
மேஷம் ராசியையும் பார்வையிடுகிறார்.
நல்ல பலன் அடையும் ராசிகள்
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்
தீய பலன் அடையும் ராசிகள்
ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம்,
மகரம், மீனம்
குரு தரும் அசுப பலன்களின் தன்மை:
குரு வருட கிரகம் எனவே இவர் தரும் அசுபப்
பலனுக்கு அந்தந்த வீடுகளுக்கு ஏற்றவாறு
தனித் தன்மை உண்டு, அதை விளக்கும்
பழம்பாடல் பின்வருமாறு:
ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை
வைத்ததும்
தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன்
படை மாண்டதும்
இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து
போம்படி யானதும்
ஈசனாரொரு பத்திலே தலை ஓட்டிலே
இரந்துண்டதும்
தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படிப்
போனதும்
சத்ய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை
பூண்டதும்
வன்மையுற்றிய ராவணன் முடி
பன்னிரெண்டில் வீழ்ந்ததும்
மன்னுமா குரு சாரி மாமனை வாழ்விலா
துரு மென்பவே
குரு ஜென்ம ராசியிலிருந்து 1-3-4-6-8-10-12
ஆகிய ஸ்தானங்களில் தரும் அசுப பலன்களை
இதிகாச நாயகர்களின் வாழ்க்கை
நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு இந்த பாடல்
விளக்குகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை குரு பகவான் ஒரு
ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு
பிரவேசிப்பார். இந்தாண்டு வாக்கியப்
பஞ்சாங்கப்படி ஜூலை 5ம் தேதி குரு பகவான்
கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு
பிரவேசிக்கிறார். 12 ராசிக்காரர்களுக்கும்
குரு பெயர்ச்சி பலன்களை அறிந்து
கொள்வோம்.

மேஷம்:
செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த
நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன்
செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி
கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை
பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய
நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும்
ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப்
பெற்றுள்ளவர்கள் நீங்கள்.
கடந்த காலத்தில் மேஷம் ராசிக்கு நான்காம்
இடத்தில் கடகத்தில் இருந்த குரு அவ்வளவு
நல்ல பலன்களை செய்ய விட்டாலும் அஷ்டம
சனியால் எந்த பாதிப்பும் இல்லாமல்
காப்பாற்றினார். இப்போது ஐந்தாம் இடமான
சிம்ம ராசியில் பெயர்ச்சியாகி வருவது நல்ல
பலன்களைத் தரும் ஸ்தானமாகும். ஐந்தாம் இடம்
என்பது பூர்வ புண்ணியம், குல தெய்வம்,
குழந்தைகள், மகிழ்ச்சி, திட்டமிடுதல், கற்பனை,
கலைகளில் நாட்டம், குரு உபதேசம், பக்தி,
ஆகியவற்றை குறிக்கும் ஸ்தானம் ஆகும்.
உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில்
புத்திரகாரகனும், தனகாரகனுமான குரு
அமர்வது அதிர்ஷ்டத்தைத் தரும். மக்கள் பேறு,
மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள்,
விசுவாசமான வேலையாட்கள், சகல விதமான
செல்வ பாக்கியம், குலதெய்வ வழிபாடு
பூஜை, தாய்மாமன் ஆதரவு, பரம்பரை
சொத்துகள் கிடைத்தல், புதிய சொத்துகள்
வாங்கக் கூடிய வாய்ப்புகளும், நீண்டகால
கனவுகள் யாவும் நிறைவேறும், புதிய
திட்டங்களும், ஆசைகளும் நிறைவேறும்.
திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு
இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு
வாரிசு உண்டாகும். திருமண வயதில்
திருமணத்திற்க்காக காத்திருக்கும்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண
யோகம் கைகூடி வரும். குடும்பத்தில்
சுபமான மங்கள காரியங்கள் நடைபெறும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு
தகுதிக்கேற்றவாறு கௌரவமான
வேலையும், பதவியில் இருப்போர்க்கு பதவி
உயர்வும் விரும்பிய இடத்திற்க்கு பதவி
உயர்வுடன் இடமாற்றம், ஊதிய உயர்வு
கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்புடைய
உத்யோகங்கள் பயணங்கள் அனுகூலம், ஆதாயம்
தரும்.
உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால்
உங்கள் புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு,
மரியாதை, உற்றார், உறவினர், நண்பர்கள்
மத்தியில் உயரும். உங்கள் ராசிக்கு
ஒன்பதாமிடத்தை குரு பார்ப்பதால் தெய்வ
அனுகூலம் காரியசித்தி, பூர்வீக சொத்துகள்
ஆகியவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதுவரை கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம்
இப்பொழுது கண் திறந்து கருணைமழை
பொழியும். உங்கள் ராசிக்கு பதினொன்றாம்
இடத்தை குரு பார்ப்பதால் எடுத்த காரியங்கள்
வெற்றி பெரும். செய்யும் தொழிலில் லாபம்
அதிகரிக்கும். வழக்கு ஏதேனும் இருந்தால்
வெற்றி கிட்டும்.
திருமணமான பெண்கள் சிலருக்கு
பிரச்சனைகள் ஏற்பட்டு புகுந்த வீட்டில்
இதுவரை அடைந்த மனக் கஷ்டங்கள், மாமியார்,
நாத்தனார்களினால் தொல்லை அனுபவிக்கும்
பெண்களுக்கு எல்லாம் இந்த குரு பெயர்ச்சி
ஆறுதலை தரும். அஷ்டமத்து சனி நடப்பதால்
எல்லா விஷயங்களிலும் கவனமாக செயல்பட
வேண்டும். கோர்ட் வம்பு தும்பு வழக்கு தேடி
வரலாம். எல்லா செயலையும் ஒரு முறைக்கு
பல முறை யோசித்து செய்வது நல்லது. பணம்,
காசு கொடுக்கல் வாங்கல், அடுத்தவருக்கு
ஜாமீன் போடுவது கூடாது. திருமணம்
சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறங்கும் பொழுது
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது
ஜாதகம், தசாபுத்தி ஆகியவற்றை நன்கு
பார்த்து திருமண முயற்சி செய்ய வேண்டும்.
குரு பெயர்ச்சி யோகத்தையும்,
அதிர்ஷ்டத்தையும் கொடுத்தாலும் அஷ்டமத்து
சனி அலைச்சல், மன உளைச்சல், சங்கடங்களை
கொடுத்து காரிய வெற்றியை கொடுக்கும்.
பொதுவாக இந்த குரு பெயர்ச்சியினால்
நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்:
சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள்
மிகவும் மென்மையானவர்களாகவும்
மற்றவர்களை அனுசரித்து நடக்க
கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால்
பிறரை கவரக் கூடியவர்களாகவும்
இருப்பிர்கள். நினைத்த காரியத்தை
செம்மையாக முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள்
நீங்கள். சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை
மாற்றி கொள்ளும் பாங்குடைய இன்பமான
வாழ்க்கை வாழும் ரிஷப ராசி அன்பர்களே
இது வரை மூன்றாமிடத்தில் குரு இருந்த
பொழுது துரியோதனன் படை மாண்டதும்
என்ற நிலை நீடிக்குமா.?அல்லது விமோசனம்
கிட்டுமா என்ற ஏக்கம் தான். ராசிக்கு
நான்காமிடத்தில் குரு வந்தபோது
தருமபுத்திரர் வனவாசம் போனாதும் என்பது
பாடல். அது போல நடக்குமா என்றால்
அப்படியில்லை. உங்கள் ராசி நாதன்
சுக்கிரனுக்கு பகை கிரகமான குரு பகவான்
உங்கள் ராசிக்கு எட்டுக்கும்
பதினொன்றிற்கும் அதிபதியான குரு
பகவான் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும்
பொழது உடல் உபாதைகள் ஏற்படும்.வீட்டில்
நிம்மதியும் சுகமும் குறையும்,
.வாலிபர்களுக்கு பெண்களால் வீண்பழி
உண்டாகும், வாகன செலவுகள் அதிகரிக்கும்
தன் வீட்டில் வசிக்க முடியாமல் வெளியூர்
சென்று வசிக்க நேரிடும், கல்வியில் தடை
வரக் கூடும், உற்றார் உறவினர் பகை வரும்.
குருசிம்மம் ராசியில் இருந்து ஐந்தாம்
பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பதால் உடல்
உபாதைகள் விரைவில் குணமாகும்,
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீண்
வம்புகள் கஷ்டத்தைத் தராது மனதில்
ஏற்பட்டிற்கும் பயம் விலகும் மற்றும் மனைவி
மூலமாக தனவரவு ஏற்படும். சிம்மத்தில்
இருந்து ஏழாம் பார்வையாக பத்தாம் பாவத்தை
பார்ப்பதால் முடங்கிக்கிடந்த தொழில் வளர்ச்சி
பெறும் உத்தியோகத்தில பதவி உயர்வு
கிடைக்கும்.
சிம்மம் ராசியில் இருந்து ஒன்பதாம்
பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை
பார்ப்பதால் குடும்பத்தில் தடைபட்டு நின்ற
சுபகாரியங்கள் நடைபெறும் தீர்த்த யாத்திரை
சென்று வர வாய்ப்புகள் உண்டாகும். உங்கள்
ராசிக்கு பாக்கியாதிபதி சனி பகவான்
உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால்
கௌரவத்துக்கு பங்கம் ஏற்படாது. கண்ட சனி
நடப்பதால் எல்லா விசயங்களிலும் சற்று
கவனமாக நடப்பது நன்று.

மிதுனம்:
புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள்
புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு
தன்மையும், பொறுமையும்
உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும்
திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல்
பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள்
ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான
அதிபதியான குரு இப்பொழது மூன்றாம்
இடத்திற்கு மாறி உள்ளார். தீதிலாதொரு
மூன்றில் துரியோதனன் படை மாண்டது
என்பது பாடல். உங்கள் ராசிக்கு பாதகாதிபதி
மற்றும் கேந்திராதிபதியான குரு பகவான்
மூன்றாம் இடத்தில் மறைவதால் பெரிய
பாதிப்பை தரமாட்டார்.
இது வரை இரண்டில் இருந்த குரு
பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை
கொடுத்திருப்பார் மூன்றில் வரும் குருவும்
நல்ல பலன்களைத் தருவார் என
எதிர்பார்க்கலாம். குரு தனது ஐந்தாம்
பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால்
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்
நடைபெறும், பிரிந்துபோன நண்பர்கள் தேடி
வருவார்கள், உத்தியோக வகையில் புதிய
ஓப்பந்தங்கள் தேடி வரும், உங்கள் சகோதர
சகோதரிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்,
தந்தை மூலமாக இலாபம் வந்து சேரும்.
குரு தனது ஏழாம் பார்வையாக ஒன்பதாம்
இடத்தைப் பார்ப்பதால் தந்தையாருக்கு
கீர்த்தியும், புகழும். நீண்ட தூர தீர்த்த
யாத்திரை சென்று வரும் பாக்கியம் கிட்டும்.
மன அமைதியும் சந்தோஷமும். உடல்
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும்
இருக்கும்.குரு ஒன்பதாம் பார்வையாக
பதினொன்றாம் இடத்தை பார்ப்பதால் தொழில்
முன்னேற்றமும் நல்ல லாபமும் உண்டாகும்.
திருமண வயதில் உள்ள உங்கள்
குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயமாகும்.
திருமணமான குழந்தையில்லாத
தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

கடகம்:
சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள் உங்கள்
ராசிநாதன் சந்திரன் பதினைந்து நாட்கள்
வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள்
தேய்பிறையாகவும் உலவி
வருவார்,விருச்சிகத்திலிருந்து ரிஷபத்தை
நோக்கி போகும் பொழது உங்கள் மனநிலை
சீராகவும் சிறப்பாகவும் செயல்படும்.
ரிஷபத்தில் இருந்து விருட்சிகத்தை நோக்கி
போகும் பொழுது இனம்புரியாத குழப்பம்
சங்கடம் தோல்வி பயம் உங்களை வாட்டும்.
இதுவரை உங்கள் ஜென்மராசியில் குரு
பகவான் தேவை இல்லாத மன
உளைச்சல்.அவமானம் சங்கடங்களை
கொடுத்தார்.இப்பொழுது தனம், வாக்கு,
குடும்ப ஸ்தானத்தில் அதாவது இரண்டாம்
இடத்தில் சஞ்சரிக்க போகிறார். தன
ஸ்தானத்தில் தன காரகன் குரு சஞ்சாரம்
செய்வதால் பொருளாதார ரீதியாக தாங்கள்
அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம்
சூரியனைக் கண்ட பனி போல விலகி விடும்.
வாக்கு நாணயம், சொல்கின்ற சொல்
பலிதமாகும், பணவரவு திருப்தி தரும்,
பொருளாதரத்தில் முன்னேற்றம் உயர்ந்து
காணப்படும், உயர் பதவிகள் தேடி வரும்,
அனைவருடனும் நல்லுறவு மேம்படும். உங்கள்
ராசிக்கு பாவத்தை குரு பார்ப்பதால்
எதிரிகள் தொல்லை நீங்கும், இல்லாத
நோய்க்கு வைத்தியம் பார்த்தவருக்கு எல்லாம்
நோய் நொடி நீங்கும். 6ம் பாவம் 10 பாவத்திற்கு
9ம் பாவமாக வருவதால் தொழிலில் இருந்த
போட்டி பொறாமைகள் நீங்கும் தொழில்
அபிவிருத்தி ஏற்படும், அசையா சொத்துகள்
வீடு,மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
7ம் பார்வையாக 8ம் இடத்தை பார்ப்பதால்
எதிரிகளின் போட்டி பொறாமைகள்
தொல்லைகள் நீங்கும்.இதுவரை உங்களை
எதிரி போல் நினைத்தவர்கள் எல்லாம்
உங்களிடம் சரணடைந்து விடுவார்கள் மனைவி
மூலமாக தன வரவு வரும்.வழக்குகளில்
வெற்றி கிட்டும். சுப காரியங்களுக்கு சுப
செலவுகள் ஏற்படும். தனது 9ம் பார்வையாக
10ம் மிடத்தை பார்ப்பாதல் வேலை
கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை
கிடைக்கும்,பதவி உயர்வும் வெகுமதியும்
கிட்டும்.கொடுக்கல்,வாங்கலில் இருந்த
தடுமாற்றங்கள் விலகும்.தொழில்
அபிவிருத்தி ஏற்படும்..

சிம்மம்:
இது வரை சிம்மம் ராசிக்கு 12ல் இருந்த குரு
இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்குள்
வருகிறார். ஜென்ம ராமர் வனத்தில் சீதையை
சிறை வைத்தது என்பது பாடல். அதனால்
நமக்கு கஷ்டம் என்பது அர்த்தமல்ல. உங்கள்
ராசிக்கு 5க்கும், 8க்கும் உரியவர் குரு
பகவான். 5ம் இடம் என்பது மனது, இதயம், திட்டம்,
எண்ணம், மகிழ்ச்சி, குரு உபதேசம்
ஆகியவற்றை குறிக்கும் இடம். ஏற்கனவே 12-ல்
வந்த பொழுது இராவணன் முடியற்று
வீழ்ந்தது என்பது பாடல். 5க்கும், 8க்கும் உடைய
குரு பகவான் 12ல் மறைந்து கெட்டவன் கெட
கிட்டிடும் ராஜயோகம் என்ற அடிப்படையில்
அதர்மத்துக்கு தலை குனிந்து விட்டார். விதி
வசத்தால் வன வாசம் போனவர்கள் எல்லாம்
நல்லவர்களாக காட்சி தந்தார்கள்.
குரு 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு
5மிடத்தை பார்ப்பபதால் திருமணமான
தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
உங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்காக
செலவுகள் அதிகரிக்கும். தாய் வழியில் தன
வரவு வரும். எடுத்த காரியங்கள் வெற்றி
பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள்
ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் வியாபாரம்,
கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு
ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து
சேரும்.7மிடம் என்பது 10மிடத்திற்கு 10மிடம்
ஆகும். அதனால் தொழில் முன்னேற்றம் மற்றும்
திருமண சுப காரியங்கள் கை கூடும்.
குரு உங்கள் ராசிக்கு 9மிடத்தை 9ம்
பார்வையாக பார்ப்பதால் தெய்வ அனுகூலம்
கிட்டும். இதுவரை தடைபட்ட காரியங்கள்
கைகூடும். வெற்றி தேடி வரும். வெளியூர்
பயணம் அனுகூலம் ஆதாயம் தரும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

கன்னி:
இது வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு
பகவான் நீங்கள் நினைத்ததை விட ஏற்றம்
கொடுத்து இருப்பார் இப்பொழது 12ம்
பாவமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க
உள்ளார். வாய்மை யுற்றிட ராவணன் முடி
பன்னிரெண்டில் வீழ்ந்ததும்.என்பது பாடல்.
கோட்சாரத்தில் குரு ராசிக்கு 12 ல்
சஞ்சரிக்கும் காலத்தில் மாரக பயமும்,பதவி
இழத்தலும் ஏற்படும் என்பது பொது விதி.
இருப்பினும் கன்னி. மிதுனம் ஆகிய
வீடுகளுக்கு பாதகாதபதி குரு அதனால்
கெட்ட இடத்திற்கு குரு வரும் காலம் கெட்டவன்
கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம் என்ற
அடிப்படையில் இந்த குரு பெயர்ச்சி மிகவும்
நன்மையை செய்யும்.
உங்கள் ராசிக்கு 4 ம் வீடு பூமி வீடு,வாகனம்
சுகம் கல்வி,தாய் ஆகிய ஸ்தானங்களை குரு
பார்ப்பதால் அதன் அடிப்படையில் யோகங்கள்
வரும்.சகல காரியங்கள் சித்தி பெறும். உங்கள்
ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பதால் கடன்
சுமை குறையும். நோய் நொடி நீங்கும்.
தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர
வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள்
ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பாதல்
வழக்கு வெற்றிகள் சாதகமாகும். பயம்
நீங்கும்.எதிர்பாராத வகையில் பண வரவு
வரும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.
வேண்டுவது பொறுமை வேண்டாதது
கோபம்.

துலாம்:
இது வரை உங்கள் ராசிக்கு 10ம் பாவத்தில்
சஞ்சாரம் செய்த குரு பகவான் இப்பொழுது
உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான
சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார். 11ம் பாவம்
என்பது மூத்த சகோதரர்கள், வித்தை, லாபம்,
நட்பு, மன ஆசைகள் நிறைவேறுதல்
ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். உங்கள்
ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும்
பொழுது முழுமையான யோகத்தைச்
செய்யும் என்பது பழமையான ஜோதிட
நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
உங்கள் ராசிக்கு 3க்கும் 6க்கும் உடைய குரு
பகவான் உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு
பகை கிரகமாக இருந்தாலும் குருவின்
வீட்டில் தான் சுக்கிரன் உச்ச அந்தஸ்து
பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை
குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம்,போகம்
துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா
காரியங்களிலும் வெற்றி பெற செய்வார்.
தேவ குரு ராசிக்கு 11ம் பாவத்தில் வந்தால்
செல்வம் சீர் குதிரை வெண்குடை தீவர்த்தி
தருமமும் தானமும் உண்டு.தாய் தந்தை
துணையுமுண்டு. குரு 7ம் பார்வையாக
உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்ப்பதால்
உங்களுடைய எண்ணங்கள் யாவும்
நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள்
எல்லாம் நிறைவேறும். குழந்தைகள்
இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம்
கிட்டும்.
உங்கள் ராசிக்கு 7ம் மிடத்தை 9ம் பார்வையாக
குரு பார்ப்பாதல் இது வரை தடை பட்ட
திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே
நடைபெறும். கருத்து வேற்றுமையால்
பிரிந்த தம்பதிகளுக்கு அல்லது விவாக ரத்து
பெற்றவர்களுக்கும் மறுமணத்தை நடத்தி
வைப்பார், தொழில் வர்த்தகம் மேலோங்கும்.

விருச்சிகம்:
இது வரை உங்கள் ராசிக்கு 9ல் இருந்த குரு
இப்பொழுது உங்கள் ராசிக்கு 10ம் இடத்துக்கு
மாற உள்ளார். 9மிடம் என்பது யோக ஸ்தானம்.
10ம் இடம் சுமாரான இடம் தான். பத்தாமிடத்து
குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே
இரந்துண்டது என்பது பாடல். கடந்த காலத்தில்
குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை
அடைந்தவர்கள் பத்தில் குரு மற்றும் ஜென்ம
சனி ஆகியவற்றால் கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாத கதையாக கடன் படும்
நிலையும், கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி என்ற நிலையயும் உருவாகும்.
உங்கள் ராசிக்கு 2க்கும் 5க்கும் உடைய குரு
இப்பொழுது 2ம் இடத்துக்கு 9ல் வருகிறார்.
இது ஒரு நல்ல அமைப்பு. தனவரவு திருப்தி
தரும். இது வரை ஏழரை சனி குரு
பார்வையில் இருந்ததால் தலைக்கு வந்தது
எல்லாம் தலை பாகையோட சென்றது. குரு
பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு
வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க
போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம்.
குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம்.
குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை
வாங்கலாம்.
வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களை
நடத்தலாம். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை 7ம் குரு
பார்வையாக பார்ப்பதால் தாயார் வகையில்
அனுகூலம் பெறலாம். பூமி, வீடு, வாகன
ஸ்தானத்தை பார்ப்பதால் அவற்றில் விருத்தி,
அபிவிருத்தி, நல்ல பலன்களை காணலாம். உடல்
நிலையில் நல்ல ஆரோக்கியம் உண்டாகும்
நன்மதிப்பு கூடும்.
குரு 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம்
இடத்தை பார்ப்பதால் வீண் விவாதங்கள்
குறைந்து பகைமை மறையும். நோய்,
நொடிகள் குணமாகும். இதுவரை
பணத்துக்கு வீண் வட்டி கட்டியவர்கள் எல்லாம்
அசலை முழுமையாக அடைத்து விடலாம்.
அசையா சொத்துகள் வாங்கும் யோகம்
உண்டாகும். எதிலும் அவசரப்படாமல்
செயல்படுங்கள். எந்த காரியத்தையும் ஒரு
முறைக்கு பல முறை யோசித்து
செய்யுங்கள். ஏழரை சனி நடப்பதால்
யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். பத்தில் உள்ள
குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார்
கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும்.

தனுசு:
இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு
இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற
இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே
உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும்
நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி,
ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு
என்பார்கள்.
ஏற்கனவே ராசிக்கு 8ல் குரு இருந்த காலம்
ராசிநாதனே அஷ்டமத்தில் மறைந்ததால்
சிலருக்கு விபத்து வைத்திய
செலவு,வேலையில் பிரச்சனை,ஓய்வு
ஓழிச்சல் இல்லாத உழைப்பு, உழைத்தும்
பெருமையில்லை,எதிர்பார்த்த காரியங்கள்
கை கூடாமை,போன்ற தீய பலன்களைத் தந்து
ஏமாற்றங்களை தந்தது. 9ல் இடத்து குரு
கஷ்டங்களை போக்குவார்.கண்ணீரைத்
துடைப்பார் ஆறுதலை
தருவார்.குருவருளும் திருவருளும் வழி
நடத்தும். கும்பிடபோன தெய்வம் ஏதிரே வந்து
உதவி செய்யும்.
உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக
உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த
காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு
முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து
சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம்
இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா
காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம்.
கண்டபடி கை நீட்டிய இடமெல்லாம் கடனை
வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும்
கட்ட முடியாமல் தலை குனிந்தவர்கள் எல்லாம்
இனி தலை நிமிர்ந்து நடக்கலாம்.
தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து
வளமான வாழ்வு உண்டு.
குரு தன் 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம்
மிடத்தை பார்க்கப் போவதால் உங்கள் கஷ்ட
நிலைகள் மாறும் பொருளாதார நெருக்கடி
நீங்கும், உழைப்புக்கு ஏற்ற வருமானம்
கிடைக்கும், உங்களை அலட்சிய படுத்தியவர்கள்
எல்லாம் வலிய வந்து நலம் விசாரிப்பார்கள்.
தங்கள் சுய நலத்திற்க்காக சில சுய
நலவாதிகள் உங்களை நாடி வருவார்கள்.
இனிமேல் வசதியும்,யோகமும் அதிர்ஷ்டமும்
உங்களை தேடி வரும் பொழது
ஆசையுள்ளவர்கள் தேடி வருவது
இயற்கைதானே. ஏழரை சனி நடப்பதால்
இருக்கிற உத்தியோகத்தில் கவனம் தேவை
கொள்ளுங்கள், புதிய முயற்சிகளை தள்ளி
போடுங்கள்.கூட்டு தொழிலில் கவனமாக
இருங்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றி
பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம் ஆனால்
அவை அனைத்தும் வெற்றி பெரும்.

மகரம்:
கடந்த ஓரு வருடமாக உங்கள் ராசிக்கு 7ம்
இடத்தில் இருந்து நற்பலன்களைக் கொடுத்துக்
கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது
ராசிக்கு 8ம் இடமான. விபத்து, கண்டம்
அபகீர்த்தி, அவமானம், கௌரவப் போராட்டம்,
விரக்தி, மனக் கஷ்டம், மன சஞ்சலம் என்ற இடத்தில்
சஞ்சரிக்க உள்ளார். உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில்
குரு வந்த பொழுது பெரும் மாற்றங்களை
நல்ல விதமாக சந்தித்தவர்கள் தான் அதிகம்.
உங்கள் ராசிக்கு 3 க்கும் 12 க்கும் உரியவரான
குரு பகவான் 3,6,8,12, ல் வரும் பொழுது
முழுமையான யோகத்தை செய்வார்.
உங்கள் ராசிக்கு 8ல் வரும் குரு தன்னுடைய
5ம் பார்வையாக ராசிக்கு 12ம் இடத்தை பார்க்க
போவதால் வெளிநாடு சம்பந்த பட்ட வேலை
வாய்ப்பு, பொருள் வரவு, நிம்மதியான
தூக்கம், சுபகாரியங்கள் போன்ற நல்ல பலன்கள்
நடைபெறும்.
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் பாவத்தை
குரு பார்ப்பாதல் இது வரை கொடுத்ததை
வாங்க முடியவில்லை.வாங்கியதை
கொடுக்க முடிய வில்லை என்ற நிலை மாறி
வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.
எதிர்பாரத விதமாக பணம்,காசு கையில்
புரளும். தேடி வந்து உதவி செய்வார்கள்.
பணம் இருந்தாலே நிம்மதியும் மக்களும்
நண்பர்களும் கூடி விடுவார்கள் அல்லவா
அதனால் எதையும் நீங்கள் தேடி போக
வேண்டாம் எல்லாம் உங்களை தேடி வரும்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4ம்
இடமான பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி
ஆகிய காரகத்துவம் உள்ள இடத்தை பார்ப்பதால்
இடம் வாங்குதல், புது வீடு குடி போகுதல்,
புதிய வாகனம் வாங்குதல் போன்ற சுப
செலவுகள் ஏற்படும். இது வரை இனம்
புரியாத நோய்க்கு வைத்தியம்
பார்த்தவர்களுக்கு எல்லாம் உடல் நிலை
சீராகும் முக வசீகரம் அதிகரிக்கும். இந்த குரு
பெயர்ச்சியால் நீங்கள் பட்டத்தை இழக்க
போவதும் இல்லை பதவியையும் இழக்க
போவதும் இல்லை கௌரவம் அந்தஸ்து உயரும்.
ஆடி மாதத்திற்கு மேல் உங்கள் ராசி நாதன்
சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்க்கப்
போவாதல் 8ம் இடத்து குருவால்
பாதகமில்லை கவலை பட வேண்டாம்.
பொதுவாக ராசியதிபதி, லக்னாதிபதி ராசி,
மற்றும் லக்னத்தை பார்த்தால் கோசார
கிரகங்களால் எந்த பாதிப்பும் வராது என்பது
தொன்மையான ஜோதிட நூல்களின் விதி
எனவே நற்பலகன்களை அதிகமாக
எதிர்பார்க்கலாம்.

கும்பம்:
இது வரை உங்கள் ராசிக்கு 6 ம் இடத்தில்
இருந்த குரு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில்
சஞ்சரிக்க உள்ளார் .இது குருவுக்கு மிகவும்
நல்ல இடம். உங்கள் ராசிக்கு 2க்கும் 11க்கும்
உடைய குரு உங்கள் ராசியை பார்ப்பது புகழ்
அந்தஸ்து.கௌரவம்.தொழில்,நண்பர்கள்
வகையில் அனுகூலம். ஆதாயத்தையும் தரும்.
இது வரை 6ல் குரு உச்சமாக இருந்ததால்
கடன்,போட்டி,பொறாமை,ஏதிரி,நோய்,வைத்திய
செலவு, பல பிரச்சினைகள் என்று உங்களை
தாக்கியது. இனி அந்த நிலைகள் மாறி எல்லா
விசயங்களும் சாதகமாகும்.
குரு உங்கள் ராசிக்கு 2க்குடையவர் என்பதால்
செல்வாக்கும், சொல் வாக்கும் மதிப்பும்
மரியாதையும் உயரும். கல்யாண வயதில் உள்ள
ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி
வரும் மேலும் நின்று போன திருமணங்கள்
இனி சுபமாக நடைபெறும். திருமண
வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண்,
பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.
நம்பிக்கையிழந்து வாழ்க்கையை
ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும்
சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு
பெயர்ச்சி கொடுக்கும். நல்லதே நடக்கும்
கடவுளை நம்புங்கள்.

மீனம்:
உங்கள் ராசி நாதன் குருபகவான் இது வரை
5ம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து
கொண்டு இருந்தார்.அதனால் கௌரவத்துக்கு
பங்கம் இல்லாமல் வாழ்க்கை ஓடி இருக்கும். இந்த
குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 6 ம் பாவமான
எதிரிகள், கடன்கள், நோய்கள் துன்பம் பயம்
தண்டனை ஆகிய காரகத்துவங்களைக்
குறிக்கும் ஸ்தானத்தில் ராசி நாதன் வரும்
பொது எதிரிகளின் தொல்லை நீங்கும்,
கடன்கள் திரும்ப செலுத்தும் நிலை
உருவாகும், பலவித நோய்களால் ஏற்பட்ட
தொந்தரவுகள் நீங்கும். குரு 5 ம் பார்வையாக
உங்கள் ராசிக்கு 10 மிடத்தை பார்க்க
போவதால் செய் தொழில் முன்னேற்றம்
கொடுக்கும்.வியாபாரம் விருத்தி அடைந்து
பெயர் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். குரு 7 ம்
பார்வையாக ராசிக்கு 12 ம் பாவத்தை பார்க்கப்
போவதால் வீண் விரையங்கள் குறையும் சுப
செலவுகள் செய்ய போதுமான அளவு
பணவரவு கிடைக்கும்.புனித யாத்திரை
செல்லும் நிலை உருவாகும்.
குரு 9ம் பார்வையாக ராசிக்கு 2 ம் இடத்தை
பார்க்கப் போவதால் வாக்கு வன்மை
அதிகரிக்கும் சொன்ன சொல்லை
காப்பாற்றிவிடலாம். குடும்பத்தில்
அமைதியான சூழ் நிலை சந்தோஷம்
இருக்கும் தனம் பொன் பொருள் சேர்க்கை,
வங்கி சேமிப்பு அதிகரித்தல், அசையா
சொத்துகள் வாங்கும் யோகம் வரும்.

பரிகாரம்:
இந்த குரு பெயர்ச்சி பலன்கள்
பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில்
கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும்
தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு
தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும்.
பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு
பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று
குருவுக்கு பிரீதி செய்வதும்,
திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம்
செய்து முருகப் பெருமானை வழிபாடு
செய்வதும் வியாழன் கிழமை தோறும்
தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்,
கொண்டைகடலை மாலை சாற்றி, நெய் தீபம்
ஏற்றி வழி பட்டு வந்தால் நல்ல பலன்கள்
விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற
உதவும் மேலும் தீய பலன்கள் பெரும் பாதிப்பு
தராமல் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ
வாழ்த்துகள்.
அனைத்து ராசி அன்பர்களுக்கும் இந்த குரு
பெயர்ச்சி வாழ்க்கையில் விருத்தியையும்
வளத்தையும் வழங்குவதற்கு வாழ்த்துகள்.

No comments: