"கரு கரு’ கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் உண்டா… கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, தவம் கிடக்கும் பெண்களுக்காகவே இந்த கட்டுரை: * வைட்டமின், ‘பி’ குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும்.

எக்ஸ்பி இனி வேண்டாம் இந்திய டிஜிட்டல் பாதுகாப்பு துறை எச்சரிக்கை

தங்களுடைய கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.

முதுமையையும் மரணத்தையும் தள்ளிப் போடலாம் - அறிவியல் முயற்சிகள்

"காலம் கெட்டுப் போச்சு. ஐம்பது வயதிலேயே சீனி வருத்தத்தோடையும் பிரசரோடையும் இண்டைக்கோ நாளைக்கோ என்று அல்லாடுறன். எங்கடை பாட்டா தொண்ணூறு வயசிலையும் மண்வெட்டியை தோளில் போட்டுக் கொண்டு பொழுது விடிய முன்னரே தோட்டத்திற்குப் போடுவார்" என்றார் ஒரு பெண்மணி. அவர் சொல்வது உண்மையா? உண்மையில் இன்று நோயாலும் பணிகளாலும் மனிதர்கள் விரைவாக இறந்து போகின்றார்களா? இல்லை அது தவறான கருத்து என்றே கருதுகிறேன். மனிதனுடைய சராசரி வயது முன்பு எவ்வாறிருந்தது? இன்று என்னவாக இருக்கிறது? மனிதர்களது ஆயுற்காலம் மனிதர்களது சராசரி ஆயுற்காலம் முன்னைய காலங்களில் மிகக் குறைவாகவே இருந்தது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதர்களுக்கு 50 வயதைத் தாண்டுவது பெரும் சவாலாக இருந்தது. 1960 இலும் 60 வயதை எட்ட முடியவில்லை. இப்பொழுது அது 75 யைத் தாண்டிவிட்டது. இருந்தபோதும் இன்னும் அதிக காலம் வாழவேண்டும் என்ற ஆசைக்கோ குறைவில்லை. அப்படியாயின் மனிதனது ஆயுற்காலம் கால ஓட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனலாமா? ஆனால் இதிகாச பாத்திரமான திருதராஸ்டினன் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தான். கிருஷ்ணன் மரணமடையவே இல்லையாம். முது கிழமாகி காற்றிலோ கடலிலோ தானாகவே கலந்து மறைந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கும் நீண்ட வாழ்வு கிடைத்திருந்தது. ஆனால் எமது அறிவுக்கு எட்டிய முன்னைய காலங்களி;ல் சராசரி ஆயுள் பொதுவாகக் குறைவாக இருந்ததற்குக் காரணம் முதுமையில் ஏற்படும் சாதாரண இயற்கை மரணங்கள் அல்ல. மரணங்கள் எதனால் எவ்வாறு? அப்பொழுது தொற்று நோய்கள் அதிகமாக இருந்தன. கொலரா, பிளேக், மலேரியா போன்றiவை கொள்ளை நோய்களாகப் பரவி ஆயிரமாயிரம் மக்களை வயது வேறுபாடின்றி கொண்டு போயின. சாதாரண காய்ச்சல் வயிற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்க அன்ரிபயோடிக் மருந்துகள் இருக்கவில்லை. அதனாலும் வகைதொகையின்றி மரணமாயினர். "என்னைப் பெத்துப் போட்ட கையோடு அம்மா செத்துப் போனா" என அக்காலத்தில் சொல்பவர்கள் ஏராளம். ஆம் அன்று மகப்பேறானது பெண்களுக்கு மீள் பிறப்புப் போன்றிருந்தது. பலருக்கு மகப்பேற்றில் மீள்பிறப்புப் பாக்கியம் கிட்டுவதே இல்லை. இன்று கூட பஞ்சமும் எயிட்சும் தாண்டவமாடும் சில ஆபிரிக்க நாடுகளில் இளவயது மரணங்கள் சர்வ சாதாரணம். இதனால் அவர்களது சராசரி ஆயுள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருக்கிறது. இதனால்தான் முன்னைய காலங்களில் சிலர் மிக நீண்டகாலம் வாழ்ந்தபோதும் பலர் இள வயதுகளில் நோய்களால் இறந்துபோவதால் சராசரி வயது குறைந்திருந்தது. இன்று தொற்று நோய்களுக்கும் புற்றுநோய்களுக்கும் கூட நல்ல மருத்துவம் கிடைக்கிறது. இதனால் மனிதனால் நீண்டகாலம் வாழ முடிகிறது. இன்றைய மரணங்கள் பெருமளவு முதுமையுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. முதுமையில் வரக் கூடிய மாரடைப்பு பக்கவாதம் புற்றுநோய் போன்றவற்றால் மரணங்கள் வருகின்றன. அவ்வாறன்றி வயதாகி செயலாட்டம் குறைந்து நடமாட்டம் கட்டுப்பட்டு, உணவு குறைந்து. உடலியக்கம் தளர்ந்து பாயோடு பாயாகக் கிடந்து மரணிப்பவர்கள் பலர். அவ்வாறாயின் இன்றைய நிலையில் மனிதனின் ஆயுசைக் கூட்ட வேண்டுமாயின் அவன் முதுமை அடைவதைத் தடுக்க வேண்டும். வயசால் முதுமை அடைவதை அல்ல. உடல் நிலையால் முதுமை அடைவதைத் தள்ளிப் போட வேண்டும். இது சாத்தியமா? முதுமையைத் தள்ளிப் போடல் மனிதர்களில் இன்னமும் செய்து காட்டவில்லை. ஆனால் சுண்டெலிகளின் ஆயுற்காலத்தை இருபது சதவிகிதத்தால் அதாவது 1/5 பங்கினால் விஞ்ஞானிகள் அதிகரித்துக் காட்டியுள்ளார்கள். அந்த வயசு அதிகரிப்பானது முதுமையின் இயலாமைகளுடன் கூடியது அல்ல. வயது அதிகரித்தபோதும் அந்தச் சுண்டெலிகளின் தசைகள் பலவீனம் அடையவில்லை. எலும்புகள் நொய்ந்து போகவில்லை. மாறாக முதுமையின் அறிகுறியான மறதி ஏற்படுவதைக் குறைக்க முடிந்தது. புதியவற்றைக் கற்கும் ஆற்றல் அதிகரித்தது. இது இரணியன் தவமிருந்து பெற்ற சாகா வரம் அல்ல என்பது உண்மைதான். இருந்தபோதும் இந்த ஆய்வு முக்கியமானது. ஏனெனில் 'முதுமை என்பது தவிர்க்க முடியாததல்ல. அது உடல் உறுப்புகளினதும், திசுக்களினதும் இயல்பான செயற்திறன் குறைந்து செல்லும் நலிபாடு அல்ல. அதை கட்டுப்படுத்தவும், மேவவும் தள்ளிப் போடவும் மனிதனால் முடியும்' என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது. மரணத்தை மட்டுமின்றி முதுமையடைவதையும் புதிய ஆய்வு முயற்சிகளால் தள்ளிப் போட முடிந்திருக்கிறது. இது வெறுமனே ஆயுற்காலத்தை அதிகரிப்பதல்ல. புதிய சாளரங்கள் இதன் ஊடாகத் திறக்கும் என்பது நிச்சயம். முதுமையுடன் தொடர்புடைய நோய்களான நீரிழிவு, மாரடைப்பு, அல்சைமர் நோய் போன்றவை ஏற்படுவதைத் தள்ளிப் போடும் வழிவகைகள் கண்டறியப்படும். துல்லியமாக விடயங்கள் தெளிவாகும்போது அத்தகைய நோய்கள் வராமல் தடுப்பதற்கான மருந்துகளைத் தயாரிப்பது சாத்தியமாகும். ஆய்வு என்ன கூறியது மூளையின் உற்புறத்தில் சிறிய கொட்டை போன்ற ஒரு பகுதியுள்ளது. ஹைபோதலமஸ் என்பார்கள். அதைத் தூண்டுவதால் அல்லது செயற்பாட்டைக் குறைப்பதால் ஆயுளை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். Dongsheng Cai என்ற இந்த ஆய்வாளர் நியூயோர்க்கில் உள்ள அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார். சுண்டெலிகள் முதுமை அடையும்போது ஹைபோதலமஸ் இல் NF-kB என்ற இரசாயனத்தின் செயற்பாடு அதிகரிப்பதை அவதானித்தார்கள். அந்த இரசாயத்தின் செயற்பாட்டை ஆய்வாளர்கள் முடக்கியபோது சுண்டெலிகளால் 1100 நாட்கள் உயிர் வாழ முடிந்ததாம். அத்துடன் அவற்றின் எலும்பு, சருமம், தசைகள், மூளையின் செயற்பாடு ஆகியன மேம்பட்டிருந்தன. வழமையாக சுண்டெலிகளின் வாழ்நாள் 600 முதல் 1000 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.NF-kB என்ற இரசாயனத்தின் செயற்பாட்டை முடக்குவதற்குப் பதிலான அதிகரித்தபோது ஆய்விற்குட்பட்ட சுண்டெலிகள் அனைத்தும் 900 நாட்களுக்கு முன்னரே மரணமடைந்தன. இந்த NF-kB என்ற இரசாயனம் குறைவதானது GnRH என்ற ஹோர்மோனின் அளவை குருதியில் அதிகரிக்கச் செய்தது. இந்த ஹோர்மோனானது இனப்பெருக்கத்தோடு தொடர்புடையது. சுண்டெலிகளில் முட்டை விந்து போன்றவை வளர்வதை ஊக்குவிப்பனவாக இருந்தன. அத்துடன் மூளையின் நரம்பு அணுக்களின் விருத்தியையும் ஊக்குவித்தது. மற்றொரு ஆய்வு முதுமையைத் தள்ளிப்போடும் வேறு முறையிலான ஆய்வுகள் பற்றியும் அறிய முடிகிறது. இது ஒரு சுவார்ஸமான ஆய்வு. இள இரத்தத்துடன் முது இரத்தத்தைக் கலந்து ஓடச் செய்வதன் மூலம் முதுமையைத் தடுக்கலாம் என்கிறது. இளங் குருதியை முதுமையான எலியின் குருதியுடன் கலக்கும் இவ் ஆராய்ச்சி முறையை heterochronic parabiosis என்பார்கள். 150 வருடங்களுக்கு முன்னரே முயலப்பட்டு கைவிடப்பட்டிருந்தது. இப்பொழுது புதிய அறிவியல் தரவுகளுடன் புத்துயிர்ப்புப் பெறுகிறது. இதுவும் மனிதர்களில் செய்யப்பட் ஆய்வு அல்ல. சுண்டெலிகளில்தான். ஆனால் இதுவும் மனிதர்களுக்கும் பொருந்தும் எனலாம். Stanford University School of Medicine யில் Villeda தலைமையில் செய்யப்பட்டது. ஒரு இளம் சுண்டெலியின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியை மற்றொரு முதிய சுண்டெலியின் குருதிச் சுற்றோட்டத்துடன் இணைத்தன் மூலம் அவற்றின் இரத்ததை ஒன்றுடன் ஒன்றாக முழுமையாகக் கலக்கச் செய்தார்கள். ஒரு சில நாட்களின் பின்னர் முதிய சுண்டெலியை ஆராய்ந்து பார்த்தார்கள். ஆச்சரியம் காத்திருந்தது. அந்த முதிய சுண்டெலிகளின் மூளைக்குள் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அத்துடன் மூளையின் கலங்களுக்கு இடையேயான தொடர்பாற்றல் 20சதவிகிதத்தினால் அதிகரித்திருந்தது. மூளையின் கலங்களுக்கிடையேயான தொடர்பாற்றலின் முக்கியத்துவம் என்ன? நாம் முதுமையடையும் போது இவை நலிவடைகின்றன. இந்த நலிவடைவே முதுமையில் ஏற்படும் மறதிப் பிரச்சனைக்கும் புதியனவற்றைக் கற்றறியும் ஆற்றல் குன்றுவதற்கும் காரணம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வின்போது முது இரத்தத்தில் இள இரத்தத்தைக் கலந்தபோது இவை மேம்பட்டன. மறுதலையாக முது இரத்தத்ததைப் பெற்ற இளம் சுண்டெலிகளின் மூளையில் ஆற்றல் குறைந்திருந்தது. உண்மையில் இது சென்ற வருடம் செய்யப்பட்ட ஆய்வு. இந்த வருடம் மீண்டும் ஒரு ஆய்வை Villeda தலைமையிலான அதே குழுவினர் செய்தனர். இப்பொழுது முழு இரத்திற்கு பதிலாக குருதிக் கலங்களை அகற்றிவிட்டு அதன் திரவப் பகுதியான பிளாஸ்மாவை (Plasma) மட்டும் ஏற்றினார்கள். இரண்டு மாதங்களேயான இளம் சுண்டெலிகளின் பிளஸ்மாவை, 18 மாதங்கள் வயதான முது சுண்டெலிகளுக்கு ஏற்றினார்கள். ஒரே தடவையில் ஏற்றவில்லை. சிறிய அளவுகளில் ஒரு மாத காலப்பகுதிக்குள் 8 தடவைகள் ஏற்றினார்கள். பின்னர் அவற்றின் நிiவாற்றலை நீர்ச் சிக்கலறை (water maze) லில் பரிசோதனை செய்யதபோது 18 மாதங்களான அவற்றின் நினைவாற்றலானது 4 முதல் 6 மாதங்கள் வயதுள்ள சுண்டெலிகளின் நிலையை அடைந்திருந்தன. இதிலிருந்து தெரிவதென்ன? "குருதியின் பிளஸ்மாவிலுள்ள ஆயிரக்கான இரசாயனக் காரணிகளில் ஏதோ ஒன்று அவற்றின் மங்கும் நினைவாற்றலை மீள கிடைக்கச் செய்கின்றன" என்கிறார் விலேடா. கலங்கள் அகற்றப்பட்ட பிளஸ்மா என்பதால் ஸ்டெம் செல்ஸ் அதிலிருக்க முடியாது. எனவே நினைவாற்றல் அதிகரிப்பிற்குக் அவை காரணமல்ல. இரசாயனக் காரணிகளே காரணம் என்பது அவரது கூற்றில் தொக்கி நிற்கிறது. ஆனால் அது என்ன என்பது இற்றைவரை கண்டறிப்படவில்லை. ஆனால் கண்டறிவதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இறங்கியிருப்பார்கள் என்பது நிச்சயம். வடகொரியா அதிபரின் சுயமுயற்சி இந்த ஆய்வு பற்றி எதுவும் தெரியாத வடகொரியாவின் மறைந்த தலைவரான Kim Jong-il ஒரு ஆச்சரியமான விடயத்தைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இளம் கன்னிப் பெண்களின் இரத்தத்தை சிறிய அளவுகளில் ஊசி மூலம் தனக்குத் தானே ஏற்றிக் கொள்வாராம். இதன் மூலம் தனது இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என நம்பினாராம். 2003 ல் அவர் இறந்தார். இறக்கும்போது அவரது வயது 69 மட்டுமே என்பதையும் கவனத்தில் எடுங்கள். எவ்வளவு பணமும் அதிகாரமும் கையில் இருந்தபோதும் மனிதனின் முயற்சிகளை இயற்கை எவ்வாறு முறியடிக்கிறது என்பதற்கு உதாரணமாகக் கொள்ளலாமா? இருதயத்தின் தசைகளையும் இளமையாக்கல் இருதயத்தின் தசைகள் வயசாகும்போது தடிப்படைகின்றன. அவ்வாறு தடிப்படைந்த நிலையிலும் அவற்றால் குருதியை இயல்பாக பம் பண்ண முடிகிறது. அதாவது அவை சுருங்கி விரிந்து குருதியை உந்தித் தள்ள முடிகிறது. ஆனால் இரு சுருக்கங்களுக்கு இடைப்பட்ட வேளையில் அவற்றால் வழமைபோல முழுமையாகத் தளர முடிவதில்லை. இதை மருத்துவத்தில் diastolic heart failure or diastolic dysfunction என்பர். தடித்த இருதயத் தசைகளை மீட்டெடுத்து அதன் செயற்பாட்டை வழமையாக்க நல்ல சிகிச்சை கிடையாது. ஸ்டெம் செல் உயிரியலாளரான Amy Wagers மற்றும் இருதய நிபுணரான Richard Lee ஆகிய இருவரும் 24 மாத வயதான சுண்டெலிகளின் குருதியை இரண்டு மாத வயதான சுண்டெலிகளினதுடன் கலந்து சுற்றோட்டம் செய்ய வைத்தார்கள். இவ்வாறு 12 சோடி எலிகளுக்கு இரத்தத்தை 4 மாத காலத்திற்குக் கலக்கச் செய்தார்கள். 4 மாத முடியில் 5 வயதான எலிகளின் இருதயத் தசை நார்களாவன 2 மாத வயதுள்ள எலிகளது இருதயத் தசைகள்போல தடிப்புக் குறைந்து மெல்லியதானதுடன் மெதுமையாகவும் மாறியிருந்தனவாம். இந்த ஆரம்ப கட்ட ஆய்வுகள் நம்பி;கை அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் இது எதனால்; நடந்தது, எந்த இரசாயனக் காரணி உதவியது. சுண்டெலியில் நடந்தது மனிதனுக்கும் பொருந்துமா என நீங்கள் கேள்வி எழுப்பினால் விடைகள் எதுவும் அவர்களிடமும் கிடையாது. "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்பார்கள். இந்த ஆரம்பக் கண்டுபிடிப்புகள் அறிவாற்றல் மிக்க ஏனைய விஞ்ஞானிகளையும் கவரும். புதிய ஆய்வுகள் தொடரும். அவற்றின் பலனாக புதிய மருந்துகளும் சிகிச்சை முறைகளும் உருவாகும் என நம்பலாம். தொடரும் ஆய்வுகளால் சாகா வரம் கிட்டாவிடினும் சாகும் வரை உறுதியான உடலும் தெளிவான மனநிலையும் கிடைக்கும் எனில் அதைவிடப் பேறு என்ன வேண்டும் எமக்கு. "பாவம் அப்பா தொண்ணுறு வயதிலேயே தலையைப் போட்டுவிட்டார்" இவ்வாறு தனது நண்பனுக்குச் சொல்லிக் கொண்டே நடைப் பயிற்சியை தொடரும் 110 வயது இளைஞனைக் காண்பது விரைவில் சாத்தியமாகலாம். டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (col) குடும்ப மருத்துவர் Thanks http://hainallama.blogspot.in/2013/09/blog-post_18.html

உயர் இரத்த அழுத்த இருதய நோய் பிரசரால் வரும் ஹாட் வருத்தம்

"இதென்ன புது நோயாக இருக்கு" வந்தவர் தனது கையில் இருந்த ரிப்போட்டை என்னிடம் நீட்டினார். இருதய நோய் மருத்துவ நிபுணருக்கு கொடுத்த கடிதத்திற்கு பதிலாக அவர் கொடுத்திருந்த சிட்டை அது. வழமையாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டு வருகிறார். அண்மையில் செய்த ஈசிஜி பரிசோதனையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் இருதய நோய் மருத்துவ நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது. ECHO Cardiogram உட்பட பரிசோதனைகள் செய்த பின்னர் அவர் கொடுத்த குறிப்பில் Hypertensive heart disease என எழுதியிருந்தது. உயர் இரத்த அழுத்த இருதய நோய் என நாம் தமிழில் சொல்லலாம். பிரசரால் வரும் ஹாட் வருத்தம் என்று பேச்சுத் தமிழிலும் சொல்லலாம்.
உயர் இரத்த அழுத்த இருதய நோய் பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தம் பற்றி எல்லோரும் அறிவார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி தெரிந்திருக்குதோ தெரியாது. உண்மையில் இது ஒரு தனியான நோய் அல்ல. உயர் இரத்த அழுத்தத்தினால் இருதயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்குகிறது. அவற்றில் முக்கியமானவை மூன்று ஆகும். இருதயத்திற்கான இரத்த ஓட்டத்தில் பாதிப்பும் அதனால் நெஞ்சு வலி மாரடைப்பு போன்றவை ஏற்படுவது, இருதயத் தசைநார்கள் தடிப்படைவது, இருதயத்தின் செயற்திறன் பாதிப்படைவது ஆகியவையே அவை. உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி மருத்துவர்கள் இப்பொழுது அதிகம் கவனம் எடுப்பதற்குக் காரணம் என்ன? உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மரணத்தத்தைத் தழுவுவற்குக் காரணமாக இருப்பது இந்த உயர் இரத்த அழுத்த இருதய நோய் என்பதாலேயே ஆகும். வயதானவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 68% மானவர்களுக்கு இருதய வழுவல் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய்தான் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் என்பது அறிகுறிகளற்ற நோய். வெளிப்படையாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நோயாளிக்கு தெரிய வரும். ஆனால் அது உயர் இரத்த அழுத்த இருதய நோயை மட்டும் கொண்டுவருவதில்லை. கண் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற வேறு பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் பிரசரை அறிந்து வைத்திருப்பது அவசியம். சாதாரண பிரஷர் என்பது 120/80 mmHg ஆகும். இவ்வாறு சாதாரண அளவில் பிரஷர் உள்ளவர்களும் தங்கள் பிரஷரை குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது அளந்து பார்ப்பது அவசியமாகும். சற்று அதிகம் உள்ளவர்கள் (120/80 - 139/89) தங்கள் பிரஷரை வருடத்திற்கு ஒரு முறையாவது அளந்து பார்க்க வேண்டும். அதைவிட அதிகம் எனில் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை தேவைப்படும். பிரஷருக்காக மருத்துவர்கள் சிபார்சு செய்யும் மருந்துகளை ஒழுங்காக உபயோகிப்பது அவசியம். தாங்களாவே அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது. தலையிடி எனச் சொல்லி மருந்துகளின் அளவைக் கூட்டுபவர்களும், தலை உலாஞ்சுகிறது எனக் குறைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறு. மருத்துவர்கள் பிரசரை அளந்து பார்த்து அதற்கு ஏற்பவே மாற்றங்கள் செய்வார்கள். நீரழிவு, கொலஸ்டரோல் பிரச்சனைகளும் சேர்ந்திருப்பவர்கள் மேலும் அக்கறையோடு தங்கள் பிரஷரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியமாகும். இருதயத்திலும் இரத்தக் குழாய்களிலும் ஏற்படும் பாதிப்புகள் பிரஷரால் இருதயத்தில் பாதிப்புகள் ஏற்படுவது எவ்வாறு? பிரஷர் அதிகரிக்கும் போது இருதயத்திற்கான வேலைப் பளு அதிகரிக்கிறது. அதிக அழுத்தத்தில் இரத்தத்தை பம் பண்ணுவதற்காக இருதயத்தின் தசைகள் அதிக பிரயாசை எடுக்க நேர்கிறது. இதனால் அதன் தசைகள் விரிவடைந்து தடிக்கின்றன. இதனால் முதலில் பருமனடைவது இடது கீழ் அறையான வென்ரிக்கில் (Ventricle) ஆகும். இதை LVH என மருத்துவத்தில் சொல்வோம். இருதயத்தின் ஏனைய பகுதிகளிலும் காலகதியில் பாதிப்புகள் ஏற்படவே செய்யும். இவ்வாறு இருதயத்தின் தசைநார்கள் தடிப்படையும்போது பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமானது இருதயத்தின் தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் குருதிக் குழாய்களில் தடிப்பு ஏற்படுவதாகும். அதனால் இருதயத்தின் தசைகளுக்கு போதிய இரத்தம் கிடைக்காது. இது நெஞ்சில் வலி, அழுத்தம், களைப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரலாம். இவை அஞ்சைனா மற்றும் மாரடைப்பை ஒத்த அறிகுறிகளாகும். இதைத் தவிர இருதயத்தின் தசைகள் தடிப்படையும்போது இருதயத்தின் நரம்புகளும் பாதிப்படையும். இதனால் இருதயத்தின் துடிப்பு லயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இருதய அறைகளின் வால்வுகளிலும் பாதிப்பு ஏற்படலாம் உயர் அழுத்த நோயானது எவ்வாறு வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லையோ அதே போல உயர் இரத்த அழுத்த இருதய நோயும் ஆரம்ப நிலையில் துல்லியமான அறிகுறிகளை காட்டுவதில்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படும். இருதய செயலிழப்பு இந்நோயால் இருதயத்தின் தசைகள் தடிப்படையும் என்பதைப் பார்த்தோம். இது தீவிரமாகி இருதயத்தின் செயற்பாடு பாதிப்புறும் வரை வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. இருதயத்தின் செயற்பாடு குறைவதை இருதய செயலிழப்பு எனவும் சொல்வார்கள். பெதுவாக 'ஹார்ட் பெயிலியர்' (heart failure) என்பார்கள். இதன் முக்கிய அறிகுறியானது மூச்சு விடுவதில் சிரமம் ஆகும். இத்தகைய இளைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஆனது பொதுவாக ஏதாவது வேலை செய்யும்போது ஏற்படும். நடக்கும்போது, படியேறும்போது, பாரம் தூக்குவது போன்ற உடலுக்கான முயற்சிகளின் போது ஏற்படும். ஆனால் நோய் தீவிரமடையும்போது எதுவித உடல் முயற்சிகள் இல்லாது படுத்திருக்கும்போது கூட இளைப்பு ஏற்படும். ஆரம்ப நிலையில் நோயாளிகள் இதனை இளைப்பு என்று நினைக்கமாட்டார்கள். சாதாரண களைப்பு என்றுதான் நினைப்பார்கள். போசாக்கு இல்லாததால் ஏற்பட்ட களைப்பு என்றும் எண்ணுவார்கள். ஆனால் களைப்பு என்பது உடல் நோய்களால் மட்டும் வரும் என்றில்லை. மனம் சோர்ந்திருந்தாலும் களைப்பு ஆகவே உணர்வார்கள். நோயாளிகள் களைப்பு என்று சொன்னால் அது எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டறிய நேரும். சாய்ந்து படுத்திருக்க முடியாது எழுந்து படுக்கையில் உட்கார வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் தலையணைகளை வைத்து தலையையும் நெஞ்சுப் பகுதியையும் உயர்த்திப் படுப்பார்கள். ஆனால் ஆஸ்த்மா நோயிலும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆயினும் காலம் செல்லச் செல்ல கால் வீக்கம், உடல் எடை அதிகரித்தல், ஈரல் வீக்கம் அதன் காரணமாக வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் இருதய செயலிழப்பினால் தோன்றும். இருதய வலிகள் அஞ்சைனாவை ஒத்த நெஞ்சு வலியானது உயர் இரத்த அழுத்த இருதய நோயாலும் ஏற்படும். நெஞ்சில் பாரம், அழுத்துவது அல்லது இறுக்குவது போன்றவை அத்தகையவையாகும். இந்த வலியானது கழுத்திற்கு, தாடைக்கு, இடது புஜத்திற்கு அல்லது முதுகின் மேற்புறத்திற்கு பரவுவது போல இருக்கலாம். மாரடைப்பு போல் அல்லாமல் அஞ்சைனா வலியானது 10-15 நிமிடங்களுக்குள் தணிந்துவிடும். ஆனால் வலி இல்லாமல் நடக்கும்போது இளைப்பு, கடுமையான களைப்பு போன்ற அறிகுறிகளுடனும் அஞ்சைனா வலி வரக் கூடும். பெண்களிலும், நீரிழிவு உள்ளவர்களிலும் வலி இல்லாது இத்தகைய அறிகுறிகளுடன் வருவது அதிகம். மாரடைப்பும் வரக் கூடும். இருதயத் துடிப்பின் ஒழுங்கின்மை. இருதயமானது ஒரு லயத்தில் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் லய ஒழுங்கு மாறுவதும், தாறுமாறாக அடிப்பதும் நிகழக் கூடும். மருத்துவத்தில் Cardiac arrhythmias என்பார்கள். இது நெஞ்சுப் படபடப்பு, திடீர் மயக்கம், நெஞ்சு வலி போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படக் கூடும். திடீர் மரணம் ஏற்படுவதும் உண்டு. உயர் இரத்த அழுத்த இருதய நோயால் இவ்வாறான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தடுக்கும் வழிகள் எவை? ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய் ஏற்படுவதற்குக் காரணம் அவர் தனது பிரஸரை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமையே. எனவே ஒவ்வொருவரும் உயர் இரத்த அழுத்த நோய் (பிரஷர்) என்றால் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் யாவை என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். இந் நோயால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்ற காரணத்தால் அடுத்த வருடத்தை உயர் இரத்தம் தொடர்பான ஆண்டாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்து இருக்கிறது. ஒழுங்கான போசாக்கான உணவு முறைகள் மூலமும் தினமும் உடற் பயிற்சி செய்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும். பிரஷர் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை உயர் இரத்த அழுத்த நோய் ஏற்கனவே இருப்பவர்கள் பின்வரும் நடைமுறைகள் மூலம் தங்கள் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் கொழுப்பு, உப்பு போன்றவற்றை தங்கள் உணவில் குறைத்து, பழவகைகளையும் நார்ப்பொருள் உள்ள உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும். தினமும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். அல்லது தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற் பயிற்சி செய்ய வேண்டும். தங்கள் எடையைச் சரியான அளவில் பேண வேண்டும். தங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை தவறாது ஒழுங்கான முறையில் உட்கொள்ள வேண்டும். புகைத்தலைத் தவிர்க்க வேண்டும் டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (col) குடும்ப மருத்துவர் Thanks http://hainallama.blogspot.in/2013/09/blog-post_18.html