2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : http://us.mc584.mail.yahoo.com/mc/compose?to=ramdost@sancharnet.in
 ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

அடிப்படை வசதி இல்லாத கத்தப்பட்டி டோல்கேட்

அடிப்படை வசதி இல்லாத கத்தப்பட்டி டோல்கேட் வருவாய் அதிகம் வந்தும் நடவடிக்கை இல்லை
Tuesday, 03 August 2010 11:15
ஒரு டோல்கேட்டிற்கு தேவையான, குடிநீர் வசதி, ஓய்வறை, போன், முதலுதவி வசதி, ஆம்புலன்ஸ், ரெக்கவரி வேன் என, எந்த அடிப்படை வசதியும் இன்றி கத்தப்பட்டி டோல்கேட் உள்ளது. பல கோடி ரூபாய் செலவில், தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சியில் இருந்து மதுரை வரை இரு பிரிவாக இப்பணிகளை ஜே.எம்.சி., எனும் தனியார் நிறுவனம் மேற்கொண்டது. சுங்க வசூலுக்கான டோல்கேட் கத்தப்பட்டியில் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் மூன்றரை முதல் நான்கு லட்ச ரூபாய் வரை சுங்க கட்டணம் வசூலாகிறது. ஆனால் ஒரு டோல்கேட்டிற்கு என உள்ள எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை.
இப்பகுதி பொதுமக்கள், பயணிகள், ஊழியர்கள் கூறியதாவது :அசோக்.S ( முத்துப்பட்டி ): இப்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் ஏற்கனவே உள்ள வளைவுகள் அப்படியே தான் உள்ளன. இரு பக்க சாலைகளின் நடுவில் செடிகள் வளர்க்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனத்தின் ஒளி நேரடியாக எதிர்புற வாகனத்தில் படுகிறது.இது விபத்துக்கு வழி வகுக்கிறது. அணுகு சாலையில் திரும்புவதற்கு ஏற்றவாறு, சாலை விரிவுபடுத்தப்படவில்லை. குறுகிய இடத்தில் சட்டென்று திரும்புவது சிரமமாக உள்ளது.
பரமானந்தம் (தெற்குதெரு) : தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 5 கி.மீ., தூரத்திற்கும் டெலிபோன் வசதி வேண்டும். இதை செய்யவில்லை. இப்பகுதியில் உள்ள வாகனங்கள் மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களும் டோல்கேட் செல்லாமல் எப்படி செல்வது ? என விசாரித்து மாற்றுப்பாதை யில் செல்கின்றனர். சிட்டம்பட்டி வழியாக முத்துப்பட்டி என்னும் ஊர் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வாறு செல்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள கண்மாய்கரைகள் முற்றிலும் சேதமாகி, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முருகன் (கத்தப்பட்டி) : இரவு நேரங்களில் டோல் கேட்டை தவிர எந்த இடத்திலும் விளக்குள் இல்லாததால், ரோடு இருள் அடைந்து உள்ளது. இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் கூட எந்த இடத்திலும் அமைக்கப்படவில்லை.
டோல்கேட்டில் பணி செய்யும் ஊழியர்கள் தங்கள் பெயரை குறிப்பிட விரும்பாமல் கூறியதாவது : இங்கு மூன்று ஷிப்ட்களில் 145 ஊழியர்கள் பணியாற்றுகிறோம். எங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் தரவில்லை. அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை வசதி கூட இங்கு இல்லை. வாகன ஓட்டிகள் இப்பகுதியில் நிறுத்தினால் சாப்பிட ஓட்டல்கள் இல்லை. ஒவ்வொரு டோல்கேட்டிலும் ஆம்புலன்ஸ், ரெக்கவரி வேன், பேட்ரல் வேன் என மூன்று வாகனங்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு இவை கிடையாது. தகவல் தெரிவிக்க போன் வசதி கிடையாது. அரசு உடனடியாக தலையிட்டு இதனை கவனிக்க வேண்டும், என்றனர். தினமும் லட்சக்கணக்கில் வரும் வருவாயில் ஓரு சிறு அளவாவது டோல்கேட் வசதிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

நம்பினார் கெடுவதில்லை!



களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.
இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.
மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.
“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.
பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?
அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…
“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.
அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.
அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.
அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.
மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.
அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.
அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

சிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்

அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை.
பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.
இது உண்மைதானா?
நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.
கிட்னி கல் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ,
(crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections), , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.
சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும்-
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் – அறிகுறிகள்
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
ஆராய்ச்சியின் முடிவுகள்
Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :
மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஒன்று :-Health professionals follow up study
45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
இரண்டு :- Nurses Health study I
94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.
மூன்று :- Nurses Health study II
1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.
இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,
1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :–
மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது,
*நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
*முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
*பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
*மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
*பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
* சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.
கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம்.
இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி, அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.
அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.
மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது.
‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.
இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.

மருந்து, மாத்திரை சாப்பிடும் போது…

இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மினி மருந்தகமே உள்ளது. ஆனால் மருந்து, மாத்திரையை எப்படி முறையாகச் சாப்பிடுவது எப்படி என்று படித்தவர்கள் கூட அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
மருந்து, மாத்திரை சாப்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்…
1. நீங்கள் மருந்து, மாத்திரை வாங்கும்போது அதன் `காலாவதி தேதி’யைப் பார்த்து வாங்குங்கள். காலாவதி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதேபோல நீங்கள் ஏற்கனவே வாங்கியிருக்கும் மருந்து, மாத்திரை காலாவதி தேதியைக் கடந்துவிட்டால் அதைப் பயன்படுத்தாதீர்கள்- அது எவ்வளவு விலை உயர்ந்ததாய் இருந்தாலும்!
2. ஒரு நாளைக்கு மருந்தை எத்தனை முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவரிடம் தெளிவாய் கேட்டு அறிந்து அதன்படி சாப்பிடுங்கள். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை என்றால் ஒருநாளைக்கு ஆறு முறை சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக ஒரே நாளில் அதிக முறை மருந்து சாப்பிடுவது தவறு.
3. எவ்வளவு மருந்து சாப்பிட வேண்டுமோ, அந்த அளவு மட்டும் சாப்பிடுங்கள். அதிக அளவில் மருந்து சாப்பிடுவது நோயை எந்தவிதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக, கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.
4. சில மருந்து, மாத்திரைகளில் 50 எம்.ஜி., 100 எம்.ஜி., 200 எம்.ஜி., என்று இருக்கும். மாத்திரையின் பெயரோடு அதையும் சேர்த்து ஞாபகத்தில் வைத்து வாங்க வேண்டும்.
5. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர் காய்ச்சலுக்காக `ஆன்டிபயாட்டிக்’ கொடுத்தால், நோய் குறைந்துவிட்டது என்பதற்காக இரண்டொரு நாட்களிலேயே நிறுத்திவிடக் கூடாது. மீண்டும் அந்த நோய் பலம் பெற்றுவிடக் கூடும்.
6. பழைய மருந்து வீட்டில் இருந்தால், அது காலாவதி தேதியை எட்டியிருக்கவில்லை என்றாலும் பயன்படுத்தும் முன் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களிலேயே வீரியத்தை இழந்துவிடும். எனவே மருத்துவரிடம் அதுபற்றிக் கேட்டுக்கொள்வது அவசியம்.
7. மருந்து உட்கொண்டதும் உடல்நிலையில் ஏதோ கஷ்டம் இருப்பதைப் போல உணர்ந்தால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் இது மிகவும் முக்கியம். உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால் அதை மருத்துவரிடம் முன்பே தெரிவிக்க வேண்டும். பெரியவர்களுக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற நோய் என்பதற்காக குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.
8. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுக்கு முன் அல்லது பின் எப்போது கொடுக்க வேண்டும், ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, ஒருமுறை மருந்து சாப்பிட்டு முடித்ததும் அதை நிறுத்திவிடலாமா இல்லை தொடர வேண்டுமா என்பதைப் போன்ற விவரங்களைத் தெளிவாகக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

வேண்டாம் அசைவம்!


அசைவம் கூடாது என்று வலியுறுத்தியுள்ள வேதாத்திரி மகரிஷி, மாமிசம் உண்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகிறார் :
“மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறமை இல்லாததால் அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன. இதை குற்றம் என்று கூற முடியாது.
விதை விதைத்து, தானே உணவை உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்ற ஆறறிவு மனிதர்களுக்கு இன்னொரு உயிரை உணவாக உட்கொள்ள வேண்டிய பழக்கம் தேவையில்லை. அதனால், மனிதன் பிற உயிரை உணவுக்காக கொல்வது நீதி ஆகாது. உணவுக்காக உயிர்க்கொலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
மாமிசமானது பிற உயிரினங்களை துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பெறப்படுவதாகும். அது, நம் உடல் அணுக்களில் கலந்தால் நம் எண்ணத்திலும் வன்முறை வளர வாய்ப்பை ஏற்படுத்தாதா? உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் புலால் உண்கின்ற சமுதாயங்களில் குற்றங்கள், போர்கள் அதிகமாக நிகழ்ந்தது தெரிய வரும்.
தாவர ஆகாரத்தை சாப்பிடுவதால் குடலுக்கு வலிமை ஏற்படும். சுலபமாக உடலுடன் கலந்து சத்தாக மாறிவிடும். ஆனால், மாமிசம் உண்பதால் குடல் வலிமையும், ஜீரண பலமும் குறைந்து, உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைந்துவிடும்.
மாமிசம் உண்பவர்கள் ஒரே தாவலில் தாவர உணவுக்கு வந்துவிட தேவையில்லை. அப்படி முயன்றால், ரத்தத்தில் ரசாயன மாறுபாடு ஏற்பட்டு, நரம்புகளுக்கு பலவீனம் உண்டாகிவிடும். சிலருக்கு நோய்களும் ஏற்படலாம். நீங்கள் சைவத்துக்கு மாற விரும்பினால் படிப்படியாகவே அந்த மாறுதலை மேற்கொள்ள வேண்டும்.
உணவு மாற்றத்தை உடலும், மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில் மாமிச உணவை சிறிது சிறிதாக குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி, 2, 3 மாதங்கள் இவ்வாறு உட்கொண்டால் சாத்வீக உணவு முறையினை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
குழந்தை முதலே தாவர உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டமே தோன்றாது” என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

அமர்நாத் புனித யாத்திரை

இயற்கை எழில் ஏகாந்தமாய் இன்னிசை பாடும் இமயமலையில் பனிலிங்கமாய் உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அமர்நாத் குகைக்கு சென்று ஈஸ்வரனை தரிசிக்கும் பெரும் பேறு அவ்வளவு சுலபமாய் எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அப்படி ஒரு பக்கியத்தை அவனருளாள் பெற்ற நான் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இப்பயணம் கைகூடும். 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபது பேர் கொண்ட குழுவுடன்  அமர்நாத் பயணம் செய்யும் பக்கியம் எனக்கு கிடைத்தத.
டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றோம். டால் ஏரியில் மிதந்த போட் ஹவுஸில் தங்கினோம். மிதக்கும் மார்க்கெட், பூத்துக்குலுங்கும் ரோக்கள் என  டால் ஏரியின் அழகு மனதை மயக்கியது., படகில்  சுற்றி வந்த போது ஏரியின் ஒரு பகுதி நம்மூர் கூவத்தை ஞாபகப்படுத்தியது. ந;õங்கள் சென்ற சமயம் காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தது, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் கண்ணில் படவில்லை.
மறுநாள் அதிகாலை சோனாமார்க் என்ற ஊருக்கு நான்கு ஸ்கார்ப்பியோ கார்களில் கிளம்பினோம். அங்கு கிளேசியர் என்ற ஹோட்டலுக்கு சென்று குளிர்காக்கும் உடைகளை அணிந்து காலில் சாக்ஸ், பூட்ஸ் சகிதம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பால்தால் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கிருந்து தான் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.
ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதரணி எனும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து 5கிலோமீட்டர் தூரம் நட்தோ, டோலி அல்லது குதிரை மூலமோ தான் செல்ல வேண்டும். ஒத்தையடிப்பாதை, ஒருபக்கம் அதலபாதாளம். கீழே சிந்து நதி அமைதியாய் அழகாய் ஓடிக்கொண்டிருந்தது. வழி முழுவதும் பனி மூடிய இமயமலையின் இயற்கை அழகும், சிந்துநதியின் சிங்காரமும் கண் குளிர கண்டோம். இருபுறம் பனி உறைந்து இருக்க, நடுவே பள்ளத்தில் உருகி ஓடும் தண்ணீர்.
அமர்நாத் குகை, 3888 அடி உயரத்தில் இமயமலைழில் உள்ளது. முகலாய மன்னர் அக்பர், ஷாஜகான் காலங்களிலும் அமர்நாத் யாத்திரை சிறப்புடன் நடந்துள்ளது என்பதை ஜகன்நாத பண்டிதராஜ் எ;“பவர் எழுதிய நூலான அசிப் விலாஹம் என்ற நூலில் தேவர்கள் தலைவர் இந்திரன் சிவபெருமானை வணங்க அமர்நாத் வருவதாக கூறப்படகிறது.
ஸ்ரீநகரிலிருந்து பகல்காம் எனும் இடம் வரை வாகனத்தில் சென்று 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமர்நாத் குகைக்கு நடந்து  அல்லது குதிரை, டோலி மூலம் செல்லலாம். இடையிடையே டென்ட்டுகளில் தங்கி 3 நாள் யாத்திரையாக செல்ல வேண்டிய வழி அது. நாங்கள் சென்றது வேறு பாதை.
150 அடி உயரமும் அகலமும் கொண்டது. அமர்நாத் குகை. ஈஸ்வரனை காணும் படப்படப்புடன் குதிரை மூலம் பயணித்தோம்.  ஓரிருவர் டோலி மூலம் சென்றார்கள். குதிரைக்கு 350 ரூபாய் வாங்குகிறார்கள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சென்றோம். பம்பம் போலோ அமர்நாத் கீ ஜெய் எனும் பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
குதிரைப் பயணம்  கோடாஸ் ஸ்டாண்டன் முடிந்தது. அங்கிருந்து பனிக்கட்டி மீது குச்சியை ஊன்றி நடந்து சென்றோம். சிரமமாக இருந்தது. பனியின் மீது நடக்க வழுக்கலும், சறுக்கலுமாக இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் டோலிவாலாக்கள் 200 ரூபாய் வாடகை பேசி படிக்கட்டு வரை கொண்டு போய்  விட்டார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரம் பனிமூடிய படிக்கட்டுகள்  ஏறினோம். இவ்வளவு கடுமையான  பயணத்திலும் ஈசனை  தரிசிக்க தேனீக்கூட்டம் போல் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
குகைக்கு அருகில் சென்றதும், அண்ணாந்து பார்த்தால் மலையில் ஒரு புறம் விநாயகர் உருவம், இன்னொரு இடத்தில் நந்தி உருவம் தெரிகிறது.  ஒரு வழியாக  குகைக்குள் சென்று கம்பிவேலிக்கு பின்னால் உருவாகியிருந்த பனி லிங்கத்தை பார்த்தபோது கண்கள் பனித்தன. அந்த இடம் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துஅடைக்காமல் லிங்கமாக மட்டும்  பனி உறைவது இறையின் அற்புதம் தான். நாங்கள் பார்த்தபோது  பதினொரு அடி உயர பனிலிங்க தரிசனம் கிடைத்தது. இங்கு சில சமயம்  இரண்டடி உயர லிங்கம் தான் இருக்குமாம். எங்களுடன் தெனாலி எனும் ஊரிலிருந்து  வந்தவர், சென்ற வருடம் இவ்வளவு சிரமப்பட்டு வந்து தரிசனம் கிடைக்காமல்  (உருவாககமல் இருந்ததாக சொன்னார்) திரும்பிரானாராம். சிலசயம் உருவாகும் லிங்கம் சீக்கிரம் உருகி விடுகிறது என்றும் சொல்கிறார்கள். கேதார், பத்ரி போன்ற இடங்களுக்கு  சிரமப்பட்டு சென்றாலும் தரிசனம் நிச்சயம். அமர்நாத் அப்படியல்ல. அவனருள் இருந்தால் தான் அவனை தரிசிக்க முடியும் என்பது நிதர்சனம். ஹெலிகாப்டர்கள் இயற்கை சூழல் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லாவிதத்திலும் ஈஸ்வரனருளால் எங்களுகு“கு அவரை பிரமாண்டமான லிங்கமாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
மனநிறைவுடன் திரும்பி டோலி, குதிரை மூலம் பஞ்சதரணியை அடைந்தோம். நாங்கள் மாலை அறரை மணியளவில் தான் திரும்ப முடிந்தது. 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர்கள் இயங்காது. எனவே அங்கு ஒரு டென்டில் தங்கினோம். மறுநாள் காலை ஆறரை மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பால்தால் வந்து பின்னர் காரில் சோனாமார்க் வந்து சேர்ந்து ஓய்வெடுத்தோம்.
ங்கள் குழுவில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களும், அவர் மனைவி ஆண்டாளும் பெங்களூரிவிலிருந்து வந்திருந்தார்களள். மூத்த குடிமக்கள் ஆண்டாள் அம்மாவுக்கு பல ஆபரேஷன்கள் நடந்திருந்தும் மன உறுதியுடன் வந்தார்கள். மற்றுமொரு வயதான அம்மாகாலில் சாக்ஸூடன் செருப்பு அணிந்து வந்து ஜில்லிப்பு தாங்காமல் அழுதார்கள்.  எங்கள் குழு காப்டன்  சுனில் அதிகாரிகளிடம் சிரமப்பட்டு அனுமதி வாங்கி அவர்களை டோலி மூலம் அழைத்து வந்து தரிசனம் செய்வித்தார்கள்.
கடுமையான பயணத்தை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எங்கும் ராணுவ வீரர்கள் காவலாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். மறுநாள் ஸ்ரீநகர் திரும்பினோம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. எனவே ஸ்ரீநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன்களை பார்த்தோம்.  சாலிமார் கார்டன் மிக அழகு. பரிமகல் கார்டனில் மெடிகேட்டட் வாட்டர் வந்தது. நேருவுக்கு அந்த தண்ணீர்  அனுப்பப்பட்டதாக  சொன்னார்கள். துலீப்கார்டன் மிகப் பெரியது. துலீப் மலர்கள் ஒரு சீசனில் தான் பூக்குமாம்.
250 படிக்கட்டுகள் கொண்ட சங்கராச்சாரியார் கோயில் சென்றோம். ஆதிசங்கரர் அங்கு வந்து ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்ததாக சொன்னார்கள்.
மறுநாள் குல்மார்க் சென்றோம். அங்கு மிக அதிக தூரம் உயர் செல்லும் கேபிள் கார்கள் மூலம் 2 பாயிண்டுகள் சென்று  பனி சூழ்ந்த மலைப்பாறை நடுவில் பனியில் அமர்ந்து சிறிது விளையாடினோம்.
இறைவனை தரிசித்த மனநிறைவோடு காஷ்மீரை காணும் பாக்கியமும்  சேர்ந்தது. உற்சாகமாகவும், உன்னதமாகவும் இருந்தது. மகிழ்வுடன் நெஞ்சம் நிறைவுடன் சென்னை திரும்பினோம்.
பனி லிங்க வடிவெடுத்து
பக்தர்களை உருக வைக்கும்
அமர்நாத் ஈஸ்வரன்
அற்புதத்தின் ஆனந்தம்
மூச்சிரைக்க நடந்தும்
குதிரை டோலி என குதித்தோடியும் வரும்
குவலயத்து பக்தர்களின்
குமுத மலர் நெஞ்சை அமுதமென
அள்ளிப் பருகும் ஆண்டவனவன்
பனிமலர் பாதம் வணங்குவோம்
-இந்திராணி  அண்ணாமலை, சென்னை.
நன்றி-குமுதம் பக்தி

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.
* நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.
* `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
* நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணி களை மாற்ற வேண்டும்.
* எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை, இசையை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம்.
* வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.
* நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது மூட்டு வலியை நன்கு குறைக்கும்.
* அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.
* உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
* வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். வலியைப் பற்றியே நினைக்கும்பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும்.