சிவப்பெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரிதான்!!!

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசியே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

சிவப்பெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரிதான். அதனால்தான் மகா சிவராத்திரியன்று நாம் சிவபெருமனை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்று கூறுகின்றனர்.

சிவ ராத்திரி விரதம் இருப்பது எப்படி:

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும்.

தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும்.

வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

பூஜையின் போது `சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும்.

மேலும் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறியும் பூஜிக்கலாம்.

இந்த பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் தூங்கிவிடக்கூடாது.

நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.