ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

இந்தியா விடுதலை அடைந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியும் அதன் தொடர்பாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் அப்பொழுது வெளிவந்த திரைப்படங்களிலும் நன்கு பிரதிபலித்தன. உழைக்கும் தொழிலாளர்கள், அக்காலத்தில் வெளிவந்த திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ஒரு பெரிய பிரிவினராக மட்டுமின்றிப் பல திரைப்படங்கள் மற்றும் அதன் பாடல்களின் கருவாகவும் விளங்கினர்.
1957-ல் வெளிவந்த, ‘நயா தௌர்’ (புது யுகம்) என்ற இந்திப் படப் பாடல் ஒன்றும் அதே தொனியில் அமைந்த 1964-ல் வெளிவந்த பணக்காரக் குடும்பம் என்ற திரைப்படப் பாடல் ஒன்றும் தொழிளாளர் ஒற்றுமையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காடுவதை இந்த மே தின தருணத்தில் நினைவுகூரலாம்.
நயா தௌர் என்ற திலீப் குமார் - வைஜெயந்திமாலா நடித்த முதலாளி - தொழிலாளி வர்க்க போராட்ட படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சாஹீர் லுதியான்வி எழுதி, ஓ.பி. நய்யார் இசை அமைத்து முகமது ரஃபி, ஆஷா போன்ஸ்லே பாடியுள்ள அந்த இந்திப் பாட்டு முதலில்.

சாத்தி ஹாத் படானா சாத்தி ரே
சாத்தி ஹாத் படானா சாத்தி ரே
ஏக் அகேலா தக் ஜாயேகா
மில்கர் போஜ் உட்டானா
சாத்தி ஹாத் படானா
என்று தொடங்கும் அந்த எழுச்சியான பாடல், ஒவ்வொரு மே தினத்தன்றும் இன்றும் வட இந்தியத் தொழிலாளர் கூட்டங்களிலும் குடியிருப்புகளிலும் ஒலிக்கும் எளிமையான இனிமையான ஆனால் மிக ஆழமான பொருளுடைய இந்தப் பாடல் ஒரு சமயம் சி.பி.எஸ்.சி. 6-ம் வகுப்பு இந்திப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
இதன் பொருள்:
தோழரே கை கொடு தோழரே கை கொடு
ஒருவர் தனியாகக் களைத்துவிடுவார்
சேர்ந்து சுமையைத் தூக்குங்கள்
தோழரே கை கொடு
உழைப்பாளிகளான நாம் இணைந்து
அடி எடுத்து வைத்தபொழுது
கடல் வழி விட்டது
மலை நுனி சாய்த்தது
இரும்பைப் போன்றது நம் இதயம்
இரும்பைப் போன்றது நம் சூழல்
நாம் விரும்பினால் உருவாக்குவோம்
பாறைகளில் பாதை
தோழரே கை கொடு
உழைப்பு நமக்கு விதிக்கப்பட்ட எல்லை
உழைப்பைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்
நேற்று மோதல் அயலாருடன் இருந்தது
இன்று நம் மக்களுடன் மோத வேண்டியுள்ளது.
நம்முடைய துக்கம் ஒரே விதம்
நம்முடைய சுகமும் ஒன்றே
நம் இலக்கு உண்மையின் இலக்கு
நம் வழி நேர்மையானது
தோழரே கை கொடு
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
அபாயம் அணையாக மாறிவிடும்
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
நடப்பது எளிதாகிவிடும்
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
கடுகு மலை ஆகிவிடும்
ஒருவரோடு ஒருவர் இணைந்தால்
மனிதன் விதியை வசப்படுதலாம்
தோழரே கை கொடு
இதன் உணர்விலும் நடையிலும் சற்றும் குறையாத வகையில், எம்.ஜி. ஆர்., சரோஜாதேவி நடித்த பணக்காரக் குடும்பம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணதாசனின் தமிழ்ப் பாட்டைப் பார்ப்போம்:
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை
அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன்
ஏழு உலகை ஆளப் போகிறான்
(ஒன்று எங்கள் ஜாதியே)
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
கண்ணதாசனின் வரிகள் உழைப்பின் உயர்வையும் உலக வரலாற்றில் உழைப்பின் பங்கையும் அழகாகச் சொல்கின்றன. தத்துவப் பாடல்களைப் பாடுவதில் தனி முத்திரை பதித்த டி.எம். சௌந்திரராஜனும் வெண்கல மணியோசை போன்ற குரல் வளம் கொண்ட எல்.ஆர். ஈஸ்வரியும் தமிழ்ப் பாட்டைப் பாடியிருந்தார்கள்


No comments: