கல்லீரல் அலர்ஜி புற்றுநோயாக மாறும்: அலட்சியம் வேண்டாம்!


ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் எனில், இந்த கல்லீரலை கவனமாக பாதுகாக்க வேண்டும். வைரஸ் கிருமிகளாலும், குடி பழக்கத்தாலும், மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவதாலும், மரபு ரீதியான காரணங்களாலும், ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரல் பாதிப்பின் அறிகுறியே மஞ்சள் காமாலை. அலட்சியம் காட்டினால், கல்லீரல் பாதிப்பு புற்றுநோயாக மாறும் ஆபத்து உள்ளது என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை கல்லீரல் துறைத் தலைவர் நாராயணசாமி.
நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
1. கல்லீரல் அலர்ஜி என கூறப்படுகிறதே அது என்ன?

கல்லீரல் வீக்கம் அடைதல், சுருங்குதல் போன்றவையே கல்லீரல் அலர்ஜியாகும். மது அருந்துதல், புகை பிடித்தல், மருந்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல் மற்றும் மரபு ரீதியாக இந்த பாதிப்பு வரலாம். பித்தப்பைகளில், கற்கள், தாமிரம், இரும்பு வேதித்துகள்கள் தேங்குவதாலும், இதுபோன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. இதற்கென, அறிகுறிகள் பெரிதாக தென்பாடது என்பதால், உஷாராக இருக்க வேண்டும்.
2. மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் சார்ந்த நோயா; இதற்கு பச்சிலை மருத்துவம் தான் தீர்வு என்கிறார்களே?
மஞ்சள் காமாலை என்பது நோய் அல்ல; கல்லீரல் பாதிப்பினால் ஏற்படும் அறிகுறியே. கிராமங்களில், கீழாநெல்லி இலையை அரைத்து சாப்பிடுவது; கையில் சூடு வைத்துக் கொள்வது போன்ற செயல்கள் நடக்கின்றன. பச்சிலை மருத்துவம் தீர்வு அல்ல. கையில் சூடு வைப்பதும் முட்டாள் தனம். இதனால், கிருமிகள் தொற்றும்; உடல் எதிர்ப்பு சக்தி குறையும். பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை பெற வேண்டும்.
3. ‘ஹெபடைடிஸ் – பி’ தடுப்பூசி எனப்படுவது என்ன; எதற்காக அதை போட வேண்டும்?
கல்லீரல் பாதிப்புக்கு, ‘ஹெபடைடிஸ் – பி’ வைரஸ் காரணமாகிறது. ‘ஹெபடைடிஸ்’ ஏ மற்றும் இ வகை வைரஸ்களின் செயல்பாடுகள், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் தடுக்கப்படும். ஆனால், ‘பி, சி’ வகை வைரஸ்கள் கொடியவை. இவற்றில், 95 சதவீதம் உடல் சக்தியால் வெளியேற்றப்பட்டாலும், ஐந்து சதவீதம் உடலில் தங்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, அதற்கான தடுப்பூசிகள் போட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக, ‘ஹெபடைடிஸ் – பி’ தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தைகள் பிறந்த, 30, 60, 180 நாட்களில் ஊசிகள் போடுவது அவசியம்.
4. கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டறிவது?
ஆரம்பத்தில் சொன்னது போல, கல்லீரல் பாதிப்பு அறிகுறி ஏதும் தெரியாது. ரத்த பரிசோதனைகள் மூலமே கண்டறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன், எண்டோஸ்கோபி, கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனைகளை செய்து, பாதிப்பின் தன்மைகளை கண்டறியலாம்.
5. கல்லீரல் புற்றுநோய்க்கு என்ன காரணம்?
கல்லீரல் அலர்ஜி, மஞ்சள் காமாலை நிலை வந்ததும் உரிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். பச்சிலை மருந்து எடுத்தோம் என, விளையாட்டாக இருந்து விடக்கூடாது. ஐந்து சதவீத வைரஸ் உடலில் தங்கிவிடுவதால், கல்லீரல் வீங்கி, சுருங்கும். அப்படியே விட்டால், அது புற்றுநோயாக மாறிவிடும். 80 சதவீத கல்லீரல் புற்றுநோய்க்கு, ‘ஹெபடைடிஸ்-பி’தான் காரணம்.
6. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை என, சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறதே?
கல்லீரலின் செயல்பாடு முடங்கினால், சாப்பிட முடியாது. குளிர்பானங்களை மட்டுமே குடிக்க முடியும். ஆரம்ப நிலை என்றால் குணப்படுத்தி விட முடியும். வேறு வழியில்லை என்றால், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதே சிறந்த தீர்வு.
இந்த சிகிச்சைக்கு, மற்ற உறுப்புகளின் மாற்று சிகிச்சைக்கு தேவைப்படும் நேரத்தை விட, நீண்ட நேரம் (உடலின் தன்மையைப் பொறுத்து, 8 மணி முதல், 12 மணி நேரம் வரை) தேவைப்படுகிறது. மிக நுட்பமாக செய்ய வேண்டிய சிகிச்சை அது.
7. குடிப்பழக்கம் உள்ளோர் இப்போதே கைவிடுவதால், கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்ப முடியுமா?
நிச்சயமாக முடியும். வெட்ட வெட்ட முடி வளர்வதுபோல், கல்லீரலும் வளரக்கூடியது. குடி பழக்கத்தால் தற்போது லேசான பாதிப்பு இருந்தாலும், குடி பழக்கத்தை கைவிடுவதால், பாதிப்பு குறைந்து படிப்படியாக கல்லீரல் நல்ல நிலைக்கு வந்து விடும். குடிப்பழக்கம் அதிகம் உள்ளோர், இன்றே குடிப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.
8. கல்லீரல் பாதிப்புகளில் இருந்து தப்ப என்ன வழி?
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் இருந்தாலும் இந்த பாதிப்பு வரும். கல்லீரலை சுற்றி, கொழுப்பு அடைத்துக் கொள்வதும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி, உணவு பயிற்சி, மன பயிற்சி முக்கியம். அதாவது, பழம், காய்கறிகளுடன் ஆரோக்கியமான உணவு உட்கொள்தல், அசைவ உணவுகளை தவிர்த்தல், தினமும் உடற்பயிற்சி செய்வதும் பாதிப்பின் பிடியில் இருந்து தப்ப வழிவகுக்கும்.
-டாக்டர் கே.நாராயணசாமி,
துறைத்தலைவர், கல்லீரல் சிகிச்சை துறை,
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.
நன்றி-தினமலர்
*
உண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

No comments: