விவாகம் நடக்க வெட்டிவேர் மாலை!

பெரிய கோயில், அரிய கோயில், பிரம்மாண்டமான கோயில், எளிமையான கோயில் இப்படி எத்தனையோ கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு கோயிலை இடிந்த கோயில் என்றே சொல்வதை அறிவீர்களா?



கேட்கவே ஆச்சரியமாக- வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆனால் அப்படிச் சொன்னல்தான் இப்பகுதியில் உள்ளவர்களுக்கே எளிதில் புரியும். கோவையில் வசதியான பொன் வணிகர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். மூத்தவளுக்கு உரிய வயதைத் தாண்டியும் திருமணமே ஆகவில்லை. எத்தனையோ வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தும் எதுவும் பலன் அளிக்கவில்லை. அந்த வருத்தத்திலேயே மனதாலும் உடலாலும் மிகவும் பாதிக்கப்பட்டார் வணிகர். அந்த நேரத்தில் ஒருவர், சிதிலமடைந்த சிவாலயத்தை எடுத்து புனருத்தாரணம் செய்தால் எத்தகைய தோஷமும், தடையும் இருந்தாலும் விலகி பெண்ணிற்கு திருமணம் நடக்கும் என்று ஆலோசனை தெரிவித்தார். உடனே ஒரு நம்பிக்கை உள்ளத்தில் தோன்ற திருப்பணி செய்வதற்கு ஏற்ற கோயிலைத் தேடும் முயற்சியை ஆரம்பித்தார். ஆனால் சிவசோதனை போல, பல வெளியூர்களில் தேடியும் பழுதுள்ள கோயிலை பார்வையில் படவேயில்லை. மனம் மீண்டும் கவலையில் ஆழ்ந்த சமயத்தில் இடிந்த கோயில் பற்றிய தகவல்கள் கிடைத்தன. உடனே அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அந்த கோயிலை பற்றிய விவரங்களையும் வரலாற்றையும் கேட்டறிந்தார். தன்னால் இயன்ற திருப்பணி செய்வதற்கு ஏற்ற கோயில் அதுவே என உணர்ந்தார். அவரோடு ஊர் மக்களும் உதவக் கைகோர்த்தனர். கோயில் திருப்பணி துவங்க திட்டமிட்டு நாள் குறித்து, பூமிபூஜை போடப்பட்டதுமே வணிகருடைய மூத்த பெண்ணிற்கு நல்ல வரன் அமைந்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திட்டமிட்டபடி திருப்பணி நடந்து முடிந்து முறையாக குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் இனிதே நடைபெற்றது. வணிகரின் மகன் கணவருடன் தம்பதி சமேதராய் வந்து வழிபட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினாள். சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கும் முற்பட்ட இக்கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குத் தொடர்புடைய அம்மன் கோயில் எனப்படுகிறது. நவராத்தி கொலு வைபவத்தின் போது ஈசன் காஞ்சிமா நதி தாண்டிச் சென்று அம்பு சவாரி நடத்தியது இங்குதானாம். திருக்கல்யாண உற்சவத்தில் இரவு நடுநிசிவேளையில் அம்பிகையை அழைத்து வந்து பட்டீஸ்வரருடன் திருக்கல்யாண உற்சவம் நிகழ்த்தி பின் சுவாமி ரதம் ஏறி வலம் வந்தது அக்கால சிறப்பு நிகழ்வாகும். காலப்போக்கில், இத்தலம் கவனிப்பாரற்று பராமரிப்பு இன்றி இருந்ததால் சிதிலமடைந்து சிறிது சிறிதாக இடிந்தே விட்டது. அம்பிகையின் திருஉருவமும் பழுதடைந்து சிதைந்து பாதம் மட்டுமே எஞ்சியது. அப்பகுதி வழியாகச் சென்று மாடுமேய்ப்பவர்களும், வழிப்போக்கர்களும் மட்டுமே வழிபட்டுச் செல்வர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இத்தலம் இடிந்த நிலையிலேயே இருந்ததால் "இடிந்த கோயில்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. வெள்ளலூர் சுவாமி என்பவர் இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டு யோக நிலையிலேயே வழிபாடுகளை நடத்தி வந்தாராம். அச்சமயத்தில் அவரை சுற்றி பாம்புகள் ஊர்ந்து சென்றதையும் பாம்புகள் அவர் மீது கிடந்ததையும் அப்பகுதி முதியவர்கள் சிலர் நினைவு கூர்கின்றனர். பொதுவாக சிவாலயங்களில் ஈசன் லிங்க ரூபத்தில் தனிச்சந்நிதியிலும் அம்பிகை தனிச்சந்நதியிலும் அருள்பாலிப்பர். ஆனால் இத்தலத்தில் ஈசனும் அம்பிகையும் ஒருசேர தம்பதி சமேதராய் சிலா ரூபத்தில் அமர்ந்து அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். இது போன்ற தலங்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலவே. விநாயகர், முருகன், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனியே சன்னதிகளில் அமர்ந்து அருள்புரிகின்றனர். பழமையான அம்பிகையின் பாதம் தனிச் சன்னதியில் ஆராதிக்கப்படுகிறது. பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பௌர்ணமியன்று மாலை 108 நாமாவளி அர்ச்சனையுடன் பூஜைகள் நடைபெறும். வருட உற்சவ திருநாளான ஆனி திருவாதிரை அன்று 108 சங்காபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரதிஷ்டா தினமான தை மாத அஸ்த நட்சத்திர நாளன்று வேள்வி பூஜை நடைபெறும். உமையும் ஈசனும் தம்பதி சமேதராய் அமர்ந்து பக்தர்களின் வேண்டுதல்கள் யாவும் தாயுள்ளத்தோடு நிறைவேற்ற வைப்பது கண்கூடு. திருமணத் தடைக்குக் காரணம் எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் பித்ரு தோஷமாக இருந்தாலும் இத்தலம் வந்து உமா மகேஸ்வரரை வழிபட்டால் அத்தோஷங்கள் விலகி விவாகம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள், வெட்டி வேர் மாலை சாத்துவதோடு ஆண்கள் சந்தனக் கட்டையும்; பெண்கள் மஞ்சள் கிழங்கும் வைத்து பூஜித்து பின் அதனைப் பயன்படுத்த வேண்டும். பதினொரு வாரங்கள் திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இப்படிச் செய்து நம சிவாய மந்திரத்தை சொல்லியபடியே ஐந்து முறை கோயிலை வலம் வந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வணங்கிடும் பதினொரு வாரங்களுக்குள் திருமண முயற்சிகள் பலன் அளித்து விடுவதாக பலன் பெற்றோர் கூறுகின்றனர். இது ஒரு சிறிய கிராமத்துக் கோயில். இருப்பினும் இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகள் இத்தலத்தின் உன்னதத்தை உணர்த்துகின்றன. பூஜைகள் யாவும் தமிழ் முறைப்படியே நடந்தேறி வருகின்றன. கோயிலின் பெரிய இடிந்த கோயில் என்று இருந்தாலும் பலரது வாழ்க்கை துளிர்விட வஞ்சனை இன்றி வரம் அளிக்கிறார்கள் இத்தலத்து இறைவனும் இறைவியும். Thanks... http://senthilvayal.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

No comments: