உழவர் திருநாள் - தைப்பொங்கல்

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு" 

என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை, விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள், பண்ணைகள் உள்ளவர்கள் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.

உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் பயன்படும் மாடுகளை கெளரவிக்கும் வகையில் வகையில் மாட்டுப் பொங்கல் என்றழைக்கப்படும் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

வண்டியிழுக்க செய்வது காளைமாடு; காலை மாலை சுவைதரும் பால்தருவது பசுமாடு; அவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும். கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; (அன்று மட்டும் மாடுகளுக்கு அடி விழாது) எருமை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கூடகொம்புகளில் வண்ணம் பூசுவர். கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். 

கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராகருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம்,குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே போலச் செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது " பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்" என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால்நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் "மாட்டுப் பொங்கலாக" கொண்‌டாடுகின்றனர்.


சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள். வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்துஅதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத்தெருவாக விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரமாயிற்றே.

Thanks...

No comments: