குறைமாத குழந்தைகள் பிறப்பது ஏன்?



முழு கர்ப்ப காலம், அதாவது, 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே, நிறைமாத குழந்தைகள். 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாக பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என, அழைக்கப்படுகின்றன.
பிறந்த குழந்தையின் எடை, 2.5 கிலோ கிராம் இருந்தால், எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும், குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன.
ஒரே பிரசவத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போதும், இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.
ஆயிரம் கிராமிற்கு குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க, இங்குபேட்டர், வென்டிலேட்டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச்சைகளை பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடியும்.
இந்தக் கருவிகள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை.
தாய்ப்பால் கொடுப்பது எப்போது: பிறந்தவுடனேயே தாய்ப்பால் அருந்த, குழந்தை முழு தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய்க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். தாய்ப்பாலில், குழந்தைக்கு தேவையான புரதம், நீர்ச்சத்து, தாதுப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு, எட்டு முதல் 10 முறை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என, ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தைகள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்து குடிப்பதால், வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதாலும், அருந்திய பால், உணவு பாதையில் இருந்து, மீண்டும் வாய் வழியாக திரும்புவதாலும், வாந்தி ஏற்படுகிறது. இதனால், பயப்பட தேவையில்லை. குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், மருத்துவரை அணுகி, உணவு பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள், பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மலம் கழிக்கும். இவை அனைத்தும், இயற்கையான செயலே. அதே நேரத்தில், தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை எனில், மருத்துவரின் அறிவுரைப்படி, தைராய்டு பிரச்னை மற்றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து, சிகிச்சை தர வேண்டும்.
டாக்டர் அ.கண்ணன்
குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்

No comments: