உனக்கு நீயே தலைவனாக இரு! உணர்ச்சியூட்டுகிறார் புத்தர்

 எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசக்கரம் நீட்டுங்கள். ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மெய்யறிவினால் மனதில் உண்டாகும் மயக்கத்தையும், அறியாமையையும் போக்குங்கள். கூரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டிற்குள் மழைநீர் இறங்காதது போல, நன்னடத்தையும், நன்னெறிப் பயிற்சியும் கொண்ட மனத்தில் ஆசைகளுக்குச் சிறிதும் இடம் இருக்காது.   ஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் முதன்மையானவன்.  நாம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீயே உனக்கு தலைவனாக முடியா விட்டால் வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? மன அடக்கம் கைவரப்பெற்றவன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி பெறுகிறான். 
 
மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாடு செல்லும் திசையை நோக்கிச் செல்வது போல, துன்பம் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். நிலையில்லாத மனம் படைத்தவர்களும், உண்மையான அறத்தை அறியாதவர்களும், மனதில் அமைதியற்று குழம்பிக் கொண்டிருப்பவர்களும் எக்காலத்திலும் ஞானத்தை அடைய முடியாது. உண்மையான ஞானம் நம்மிடம் தோன்றி விட்டால், மனம் பூரண விடுதலை அடைந்து விடும். அப்போது சொல்லும், செயலிலும் அமைதி தவழும்.  வயலில் களைகள் பயிருக்கு தீமை தருவது போல, மனிதர்களுக்கு ஆசையே எல்லாத் தீமைகளையும் உண்டாக்குகிறது.   எந்தக் காலத்திலும் பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமை அன்பால் மட்டுமே போக்க முடியும்.  சோம்பித் திரியாதீர்கள். காமத்தோடு புலன் இன்பங்களை நாடாதீர்கள். ஆக்கமும், கேடும் தருகின்ற இருவழிகளை ஆராய்ந்து அறிவின் துணை கொண்டு ஆக்கம் தரும் பாதையில் நடை போடுங்கள்.
 
நியாயமான முறையில் செல்வத்தை சேர்த்து, அதனைக் கொண்டு இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்து வாழபவன் பெரும் புண்ணியங்களைத் தேடிக் கொள்கிறான்.  மனிதர்கள் தங்கள் நாக்கினைக் காத்துக் கொள்வது அவசியம். அப்போது எல்லா நன்மைகளும் தானாக வந்து சேரும்.  உங்கள் அறிவை நீங்களே தூண்டிக் கொள்ளுங்கள். உங்கள் நீங்களே பரிசோதனை செய்யுங்கள். இதனால், வாழ்வில் உண்டாகும் துன்பங்களைத் தடுத்துக் கொள்ளும் வலிமை உண்டாகும்.   எந்த ஒரு நதியானாலும் ஒருவனுடைய பாவத்தைக் கழுவ முடியாது. எந்த ஒரு சடங்கும் நம்மைத் தூய்மைப்படுத்தாது. தயவு, தருமசிந்தை, அமைதி போன்ற நல்லொழுக்கங்களே நம்மை ஈடேற்றும்.  உலகத்தின் மீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றை விடுங்கள். வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, அதிகாரமோ அவனை மேலும் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.   "அவன் என்னை நிந்தித்தான், தாக்கினான், என் பொருளை அபகரித்தான்' என்று எண்ணிக் கொண்டே இருந்தால், எந்நாளும் பகைமை தீர்வதில்லை. அத்தகைய எண்ணங்களுக்கு சிறிதும் இடம் தராதீர்கள். அவனிடம் அன்புகாட்டுங்கள். பகைமை மறைந்துவிடும்.

 

No comments: