எல்லா உயிரும் நம் உயிரே!

தீபாவளியன்று தான்மகான் மகாவீரர் மகாநிர்வாணம் (முக்தி) அடைந்தார். இந்த இனியநாளில் அவரது பொன்மொழிகளைக் கேட்போமே! 
*
எல்லா உயிர்களையும் தன்னுயிராக நேசிக்கப் பழகுங்கள். கொல்லாமை என்னும் நெறி பல வகையான சுகங்களையும் அளிக்க வல்லது. அச்சத்திலிருந்தும் பகையுணர்விலிருந்தும் விடுபட்டவன் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டான்.
*
வாய்மை சந்திர மண்டலத்தை விட மிகவும் தூய்மையானது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கதாகும்.
*
பிறருக்கு கொடுக்காமல் எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரருக்குரி யதை எடுப்பதும் கூடாது. 
*
எந்தப் பேச்சானது கடினமானதோ, மற்றவருக்கு துன்பம் தருவதோ அப்பேச்சைத் தவிர்ப்பதே நல்லவர்களின் குணமாகும்.
*
மனம் விரும்பியதை அடையாவிட்டால் தளர்ந்து போய் விடுதல் கூடாது. வேண்டாத ஆசைகளை மனதில் இருந்து அகற்றிவிடுங்கள்.
*
நல்ல விரதம் பூண்ட சாதனையாளர்கள் குறைவாகப் புசிப்பதோடு, அளவாகவே பேசவும் செய்வர்.
*
சந்தேக மனப்பான்மை கொண்ட மனிதன் எப்போதும் உயர்வு நிலை பெறுவதில்லை.
*
பணத்தை அமிர்தம் என்று நினைத்து தேட முற்படுபவர்கள் பாவச் செயல் மூலம் அதைப் பெறுகிறார்கள். இத்தேடலே அவர்களை மரணவாசலுக்கு அழைத்துச் சென்று விடும்.
*
கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய குணங்களில் ஒரு குணம் நம்மிடம் இருந்தாலும் நற்குணங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
*
நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் ஒழுக்கமில்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. நற்கதியை அடைய ஒழுக்கமே ஆதாரமாகத் திகழ்கிறது.
*
அறவழியில் நடப்பவரைக் கண்டால் அங்கேயே அவரை வணங்குங்கள். நோயாளிக்குச் சேவை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். பிறரின் நலனுக்காகவும், சுகத்திற்காகவும் பாடுபடுபவன் இறுதியில் தனக்குத் தானே சுகத்தைத் தேடிக் கொண்டவனாவான்.
*
ஆறுவகையான பேச்சுக்களைப் பேசக் கூடாது. பொய், கடினத்தன்மை, யோசிக்காத தன்மை, எரிச்சல், திரித்துக்கூறல், சண்டையைத் தூண்டுவது ஆகிய ஆறுவகையான குற்றங்களைக் களைந்து நாம் பேச வேண்டும். 

 

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் பதிவை படிக்கும் போது மனது தன்னம்பிக்கை அடைகிறது..

வாழ்த்துக்கள்..