பணக்காரனாக எளிய விரதம்! -பிப்.10 - ரத சப்தமி



சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். "சூரிய ஜெயந்தி' என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, "சப்தமி திதி' என்கிறோம்.
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, "அர்த்த பிரம்மோற்சவம்' என்று பெயர். "அர்த்த' என்றால், "பாதி!' பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, "அர்த்த பிரம்மோற்சவம்' என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.
இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.
இவ்வாண்டு ரதசப்தமி முதல், அதிகாலையே எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காலையிலேயே நீராடி, பணிகளை விரைவில் துவக்கி விடுங்கள். பணக்காரர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

No comments: