
மனிதன், முயற்சி செய்து சோர்ந்து போன சமயம், “தெய்வமே துணை’ என்கிறான். ஆக, கடைசி நேரத்திலாவது தெய்வத்தை நினைக்க வேண்டியுள்ளது; அவனை சரணடைய வேண்டியுள்ளது. “இதெல்லாம் வேதாந்தம் சார்… நமக்கெல்லாம் புரியாது!’ என்பவரும் உண்டு. ஆனால், அதில் முழுமையாக இறங்கும்போது, உண்மைகள் புலப்படும்; மனத்தெளிவு ஏற்படும். மனம் தெளிவு ஏற்பட்டு, இந்த உலகமும், அதிலுள்ள யாவுமே அந்த பரபிரம்மம்தான் என்ற உண்மையை உணர்வதே முக்திக்கு வழி என்றெல்லாம் உள்ளது. வாழ்நாளில் சிறிதளவாவது தெய்வ சிந்தனை இருப்பது நல்லது என்பது பெரியோர் வாக்கு. மனிதன் ஏதாவது பாவத்தை செய்து கொண்டே தான் இருக்கிறான். எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்து, புண்ணிய காரியங்களையே செய்து வந்தாலும், ஏதாவது ஒரு பாவத்தையும் செய்துவிட நேர்ந்து விடுகிறது. பாவம் என்பது மனதாலோ, வாக்காலோ, இந்திரியங்களாலோ ஏதோ ஒன்றினால் செய்யப்பட்டு வருகிறது. ஒருவரைப் பற்றி தவறாக எண்ணி விடுகிறோம்; ஒருவரை கடுமையாக தூஷித்து விடுகிறோம்; ஒரு ஜீவனுக்கு இம்சை செய்து விடுகிறோம்… இப்படி ஏதாவது ஒன்றினால், ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறோம்; இது இயற்கை! இப்படி மனிதனிடம் சில பாவங்கள், தோஷங்கள் இருக்கின்றன. ஆனாலும், இப்படிப்பட்டவர்களுக்கும் கருணை காட்டுகிறான் பகவான்! எப்படியாவது மனிதன் திருந்தி, பக்தனாகி, தன்னை வந்தடையட்டும் என்பது அவனது எண்ணம். சிலருக்கு தெய்வ பக்தி இருக்காது; ஆனாலும், அன்பு, இரக்கம், நேர்மை, நீதி, தயை போன்ற குணங்கள் இருக்கும். இந்த குணங்களும் இறைவனேதான் என்று சொல்லப்படுகிறது. இந்த குணங்கள் உள்ளவனிடமும் இறைவன் இருக்கிறான். கடவுள் என்பது பரமாத்மா, இதர உயிர்கள் ஜீவாத்மா. இந்த பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றாக வேண்டும். அதுதான் முக்தி என்றனர். பரமாத்மாவாகிய தன்னை ஜீவாத்மா வந்தடைவதற்கான உபாயங்களை சொல்லியிருக்கிறார். பரமாத்மாவே வந்து ஜீவாத்மாக்களை கைதூக்கி விடுவது பக்தர்கள் விஷயத்தில் நடக்கலாம். மற்றவர்கள் தாங்களாகவே முயற்சி செய்துதான் அவனை அடைய வேண்டும். பக்தி, பிரபத்திதான் உபாயம் என்றனர். பகவானை பக்தி செய்து, அவனே கதி என்று அவனையே சரணமடைந்து விட்டால், அவன் அழைத்துக் கொள்வான். இரண்டும் ஒன்றாகி விடும் என்றனர். இப்படியாக ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றாகி விட்டால், அவன் பிறவிக் கடலைக் கடந்தவனாகி, பகவானோடு கலந்து விடுகிறான்.
No comments:
Post a Comment