சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது.  குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.
வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள்.  ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை.
ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள்.  அதைப்பற்றி அறிந்து கொள்வோம்.
காய்ச்சல்
குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும்.  வீறிட்டு அழும்.  திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும்.  இலேசாக இருமிக்கொண்டே இருக்கும்.  பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும்.  உமிழ்நீர் சூடாக இருக்கும்.  அடிக்கடி கொட்டாவி விடும்.
உடலில் அக்கி உண்டானால்
குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும்.  அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும்.  உதடுகள் வறண்டு காணப்படும்.
வயிற்றுப் பொருமல்
குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும்.  கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும்.  உடல் மிகவும் வாட்டமாக இருக்கும்.  பால் குடிக்காது.  மலம் வெளியேறாது.
காமாலை
குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும்.  பசியில்லாமல் இருக்கும்.  பால் குடிக்காது.  சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.  மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.
விக்கல்
மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும்.  குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும்.  திடீரென்று ஏப்பம் விடும்.
நாக்கில் பாதிப்பு
உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.  கன்னங்கள் வீக்கமாக இருக்கும்.  நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும்.  சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும்.  வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.
மூலம்
மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும்.  மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.
தொண்டைப் பிடிப்பு
இலேசான சுரம் இருக்கும்.  குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும்.  எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.
காது பாதிப்பு
கையினால் காதுகளைத் தொடும்.  காதுகளை அழுத்தித் தேய்க்கும்.  தூக்கமிருக்காது.  பால் குடிக்காது.
கழுத்தில் பாதிப்பு
குடித்த பால் ஜீரணம் ஆகாது.  தொண்டையில் சளி கட்டும்.  பசி எடுக்காது.  காய்ச்சல் இருக்கும்.  குழந்தை சோர்வாக காணப்படும்.
வாயில் பாதிப்பு
அதிக உமிழ்நீர் சுரக்கும்.  தாய்ப்பால் குடிக்காது.  மூச்சு விட திணறும்.
வயிற்றுவலி
குழந்தை அழுதுகொண்டே இருக்கும்.  தாய்ப்பால் குடிக்காது.  நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும்.  உடல் குளிர்ந்திருக்கும்.  முகம் வியர்த்துக் காணப்படும்.
இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.

No comments: