கெமிக்கல் சாயம் கலந்த உணவுப்பொருட்கள்: உடல்நிலை பாதிக்கும் அபாயம்


உணவு பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஆடைகளுக்கு பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களும் பயன்படுத்துவதால், அதை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு, உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் பலர், வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக, தாங்கள் தயாரிக்கும்  உணவு பொருட்களில்  பல்வேறு வண்ணங்களை கலக்கின்றனர். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேக், சுவீட், குழல் அப்பளம் முதல் ஓட்டல்களில் பெரியவர்கள் சாப்பிடும் சிக்கன்-65, பொறித்த மீன் என அனைத்திலும், வண்ண சாயங்கள் கலக்கப்படுகின்றன.  நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வண்ணங்கள் சேர்ப்பதால், உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதற்கு மாறாக, பாதிப்பையே ஏற்படுத்தும்.
இயற்கை மற்றும் செயற்கை வண்ணத்தை பயன்படுத்திய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் பலர், சமீபகாலமாக விலைமலிவு, பலன் அதிகம் என்பதற்காக, துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படுத்தும் கெமிக்கல் வண்ணங்களை உணவு பண்டங்களில் சேர்க்கின்றனர். இதுபோன்ற கெமிக்கல் வண்ணம் சேர்த்த உணவு பண்டங்களை சாப்பிடுவதால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
நகராட்சி உணவு ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: உணவு பொருட்களில் இயற்கை வண்ணம், செயற்கை வண்ணம் என்ற இருவகை வண்ணங்கள் கலக்கப்படுகின்றன. பீட்டா கரோட்டின், குளோரோபில், ரிபோப்ளேவின், கேராமல், சேப்ரான் உட்பட 11 வகை இயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய நான்கு செயற்கை வண்ணத்தையும் பயன்படுத்தலாம். செயற்கை வண்ணத்தை பொறுத்தவரை, சிவப்பில் பான்சியோபோராக், கார்மோசிம், எரித்ரோசின், மஞ்சளில் டாட்ராசின், சன்செட் எல்லோ, நீலத்தில் இன்டிகோ கார்மென், பிர்லியண்ட் புளூ, பச்சையில் பாஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களையே உணவு பொருட்களில் சேர்க்க வேண்டும். அதிலும், ஒவ்வொரு பண்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே வண்ணங்களை சேர்க்க வேண்டும். நிர்ணயித்த அளவுக்கு கூடுதலாக இயற்கை, செயற்கை வண்ணம், கெமிக்கல் சாயம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடும் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும், கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, கேன்சர்,
பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உணவு கலப்பட தடை சட்டம் 1954ல் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வண்ணத்தை விட கூடுதலாக சேர்த்திருப்பது உறுதியானால், அதை தயாரித்தவர்கள், விற்பவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஆயுள் தண்டனை வரையும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். "உணவு பாதுகாப்பு சட்டம் 2006' இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அந்த சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால், உணவு பொருளில் கலப்படம் செய்வோருக்கு லட்சக்கணக்கில் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.
Thanks
wordpress

No comments: