மண்ணின் மக(ரு)த்துவம்


இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆட்கொள்ளப் பட்டு  இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும்.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு என்றாலும் உலகம் அழிவு நிலைக்குச் சென்றுவிடும்.
இவற்றுள் மண்ணைப் பற்றியும், அதில் அடங்கியுள்ள மருத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.

மண் உயிர்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் அரண். மண்ணை பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வார்கள்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணில் மருத்துவக் குணங்களும் உண்டு.  இதை சித்தர்கள் அன்றே உணர்ந்து மண்ணின் மருத்துவ மகிமையைக் கூறியுள்ளனர்.
மனிதனின் பேராசையால் மண் சீரழிக்கப்பட்டு வருகிறது.  இரசாயன வேதிப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகள் இவற்றால் மண் வளம் கெட்டுவிட்டது.  விவசாயம் செழித்த நிலங்கள் உவர் நிலங்களாகக் காட்சியளிக்கின்றன.  மண்ணின் மகத்துவம் புரியாமல் அவற்றின் மேல் கான்கிரீட் தளங்களை அமைத்துவிட்டோம்.  இதனால் பசுமையை இழக்கிறோம்.
நிலத்தடி நீரை இழக்கிறோம். எல்லாவற்றையும் இழந்து செயற்கை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.  இதனால் பூமி அங்காங்கே நில நடுக்கமாகவும், எரிமலையாகவும் வெடித்துக் கொண்டு இருக்கிறது.
உலக உயிர்களை எல்லாம் வாழ வைப்பது மண்தான்.  அதோடு அதற்கு தேவையான உணவு வகைகளை வளர்த்துத் தருவதோடு தானே மருந்தாகவும் அமைகிறது.
மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதிலுள்ள மருத்துவ மகிமைகளைகண்டு மண்குளியல், மண்பட்டி என இரு சிகிச்சை முறைகளைக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
மண் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கிறது.
இதில் மருத்துவத்திற்காகப் பயன்படுவது சுத்தமான புற்று மண் மட்டுமே.  இதில் உப்பு, உவர், சுண்ணாம்பு, கந்தகம், மைக்கா என எதுவுமே கலந்திருக்கக் கூடாது.  மண் ஊறவைக்கும் நீரும் அவ்வாறே தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இத்தகைய மண் இரத்த ஓட்டத்தடை, தூக்கமின்மை, நரம்புத் தளர்வு, தோல் நோய்கள் போன்றவற்றுக்குச் சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது.
இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பலவகைச் சிகிச்சை முறைகளில் மண் சிகிச்சையும் ஒன்று.
புற்று மண்ணுக்கு உறிஞ்சும் சக்தி உண்டு. வெப்பத்தை கிரகிக்கும் தன்மையும் உண்டு.
மண் சிகிச்சை இரு வகைகளில் அளிக்கப்படுகிறது.
1. மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் சிகிச்சை.
2. மண்பட்டி - மண்ணை துணியில் சுருட்டி, வேண்டிய இடத்தில் பட்டி போடுவது.
மண்பூச்சு
உடல் முழுவதும் மண் பூசுவது அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் பூசுவது என இரு வகைகளில் மண்பூச்சு சிகிச்சை முறை நடைபெறுகிறது.
நன்கு குழைத்த மண்ணைப் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வருவதுதான் இந்த சிகிச்சை முறை.  இதனை குளிர்காலத்தில் செய்யக் கூடாது.  வெயில் நேரத்தில் நிழலில் அமர்ந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.
குழைத்த மண்ணை காலிலிருந்து மேல் நோக்கி பூச வேண்டும்.  கண், வாய், காது தவிர்த்து உடல் முழுவதும் பூசுதல் நல்லது.
இதனால் உடல் சூடு தணிகிறது.
உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தின் நிலை சீராகுகிறது.  தச வாயுக்களின் செயல்பாடு தூண்டப்படுகிறது.  பித்த அதிகரிப்பு குறைவதால் இரத்தம் சுத்தமாவதுடன் இரத்தம் தங்குதடையின்றி உடல் முழுவதும் சென்று அடைகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நீர்களை மண் உறிஞ்சிக் கொள்கிறது.  இதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றன.  நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன.  எலும்புகள் வலுவடைகின்றன.  மேலும் மன அழுத்தம் குறைகிறது.  சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பாதுகாப்படைகிறது.  அதுபோல் உடலில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கட்டி, புண், படை போன்றவற்றுக்கு அப்பகுதியில் மண் பூச்சைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.
வயிற்றைச் சுற்றி மண் பற்றுப் போட்டால் அசீரணம், மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.  நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
இன்றும் கிராமங்களில்,  சோப்புகளுக்குப் பதிலாக கரப்பான் என்ற மண் வகையை உடம்பில் தேய்த்து குளிக்கும் வழக்கம்  உள்ளது.
மண்ணை, வயிற்றுப்  பகுதியில் வைத்துக் கட்டினால் அஜீரணம், வாயுக் கோளாறு, வயிற்றுப்பொருமல் போன்றவை நீங்கும்.  மேலும் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதால் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக மண் பட்டியை 15 நிமிடங்களுக்கு மேல் கட்டியிருக்கக் கூடாது.
கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு மண்பட்டி சிகிச்சை நல்லது.
ஆகையால்தான் இயற்கை சிகிச்சை முறைகளில் மண் குளியல் முக்கிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள்.  பழங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் இதை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  இன்றைய கால கட்டத்தில் சிறந்த சிகிச்சை முறையாக செய்தும் வருகிறார்கள்.

No comments: