சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?


தெய்வங்களுக்கு மிருதுவானதும், கெட்டியானதும், சுத்தமானதுமான அழகான அங்கவஸ்திரம் சாத்தினால், அந்த அங்கவஸ்திரத்தில் எவ்வளவு இழை நூல் இருக்கிறதோ அவ்வளவு வருடத்திற்கு சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறலாம் என்று சிவ தருமம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
பட்டு வஸ்திரம் (ஆடை), பஞ்சு நூலால் தயாரிக்கப்பட்ட வஸ்திரங்கள் போன்றவற்றைக் கொண்டே இறைவனை அலங்கரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய வஸ்திரத்தை மறுமுறை உபயோகிப்பது என்றால் அதை நீரில் நனைத்து காய வைக்காமல் உபயோகிக்கக்கூடாது.
   சிலர் சலவை செய்து வந்த வஸ்திரத்தை திரும்பவும் நனைக்காமல் பயன்படுத்துகிறார்கள். அது சாஸ்திரத்திற்கு எதிரானது மட்டுமன்றி, சாத்துபவருக்கு கெடுதியையும் கொடுக்கும். மேலும் கிழிந்த, பழைய வஸ்திரம், எலி அல்லது பூச்சி கடித்த வஸ்திரத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
முற்பகலில் வெண்மையான வஸ்திரமும், பகலில் சிவப்பு வஸ்திரமும், மாலையில் மஞ்சள் வஸ்திரமும், அர்த்தஜாமத்தில் கறுப்பு நீலநிற வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். விசேஷ தினங்களில் பலவித நிற வஸ்திரங்களைக் கொண்டு சுவாமியை அலங்கரித்து வழிபடலாம்.
அங்கவஸ்திரத்தோடு சந்தனம் சாத்தி இறைவனை வழிபடுவதும் சிறப்பானதுதான். சந்தனத்தோடு அகில், குங்குமப்பூ, பச்சை கற்பூரம், பன்னீரும் கலந்தே இறைவனுக்குச் சாத்த வேண்டும்.
இதுதவிர, இஷ்ட தெய்வத்திற்கு ரத்தினங்கள் சாத்தி வழிபடும் வழக்கமும் உள்ளது.
எல்லாவித ரத்தினங்களை தினந்தோறும் சாத்தி அலங்கரித்தாலும் ஒவ்வொரு தினமும் அதற்கான ரத்தினங்களையும் அணிவித்து அலங்கரிப்பதால் அபரிமிதமான பலனை பெறலாம் என்கிறார்கள். அதன்படி,
ஞாயிறு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - இந்திரநீலம்... என்று இறைவனுக்கு நவரத்தினங்கள் சாத்தி வழிபாடு செய்யலாம்.

No comments: