சாதனைப் பெண்மணி!- "காரடையான் நோன்பு'



பெண்களுக்கு, எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு, உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப் பிறவியாக அவள் திகழ்ந்தாள்.
மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக, 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து, 18 ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை, அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. அந்தக் குழந்தைக்கு, தனக்கு வரமளித்த தேவதையின் பெயரையே இட்டார்.

சாவித்திரியை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. காரணம், அவளை ஒரு தெய்வப் பிறவியாக கருதினர். கவலையடைந்த அஸ்வபதி, மகளை நேரடியாக மாப்பிள்ளை பார்க்க அனுப்பினார். "உனக்குரிய கண வனை நீயே தேர்ந்தெடு...' எனச் சொல்லி அனுப்பினார்.
அவள் பல நாடுகளுக்கும் சென்று திருப்தி ஏற்படாமல், ஒரு காட்டிற்குச் சென்றாள். அங்கே த்யுமத்சேனன் என்ற பார்வையற்ற ராஜா, தன் மனைவி ஸைவ்யையுடன் வாழ்த்து வந்தார். அவர்களது மகன் சத்தியவான், அவர்களுக்கு தகுந்த உதவி செய்தான். சத்தியவான் மிகுந்த குணவான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். பெற்றவர்களுக்கு சேவை செய்யும் அவனது பண்பு, மிகவும் பிடித்து விட்டது, அவர்கள் எதிரிகளிடம் தங்கள் நாட்டைப் பறிகொடுத்து, காட்டில் தங்கியிருந்தனர்.
ஊர் திரும்பிய சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்ய விரும்புவதாக தந்தையிடம் சொன்னாள். அப்போது, அங்கு வந்த அஸ்வபதியின் குருநாதரான நாரத முனிவர், "சத்தியவான் குணவான் என்பதில் ஐயமில்லை. உலகில் அப்படி ஒரு ஆணை பார்க்க இயலாது. சாவித்திரிக்கு தகுதியானவன் என்றாலும், அவனது ஆயுள் இன்னும் ஓராண்டே இருக்கிறது...' என்றார்.
"அப்படியானால் வேறு மாப்பிள்ளை பார்...' என, மகளிடம் அஸ்வபதி சொல்ல, "வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம்; அதை, எதிர்கொள்ளவே நாம் பிறந்திருக்கிறோம்...' என்று, திடமாகச் சொன்ன சாவித்திரியை, நாரதர் பாராட்டினார். அந்த திருமணத்தை தைரியமாக நடத்தும்படி அஸ்வபதியிடம் சொன்னார்.
அஸ்வபதியும் திருமணத்தை முடித்து விட்டார். இந்நிலையில், நாரதர் சொன்ன கணக்குப்படி நான்கு நாட்களே இருந்த நிலையில், சாவித்திரி ஒரு விரதத்தை துவங்கினாள். அதன்படி, மூன்று நாட்கள் இரவும், பகலும் விழித்திருந்து, உண்ணாமல் இருக்க முடிவு செய்தாள்.
"அம்மா... இது சாத்தியம் தானா!' என மாமனார் கேட்டார்.
"எல்லா செயல்களிலும் <உறுதிப்பாடே வெற்றிக்கு காரணம்...' என்று பதிலளித்த சாவித்திரி, விரதத்தை துவங்கினாள்.
அன்று, பெற்றோருக்கு பழம் கொண்டு வர காட்டுக்கு கிளம்பினான் சத்தியவான்; சாவித்திரியும் உடன் வருவதாகச் சொன்னாள். "காட்டில் நடக்க கஷ்டமாக இருக்குமே...' என்ற கணவனிடம் அனுமதி பெற்றாள். மாமனார், மாமியாரும் பத்திரமாக சென்று வர அறிவுறுத்தினர். அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலை வலி ஏற்பட்டது.
அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது.
"நீங்கள் யார்?' என்றாள் சாவித்திரி.
"நீ பதிவிரதை என்பதால், உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்ம ராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன்...' என்றவன், சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான்.
சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, "நண்பரே...' என்றாள்.
"நான் உன் நண்பனா?' என்ற எமனிடம், "ஒருவன், மற்றொரு வனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகின் றனர் என்று சான்றோர் சொல்வர்...' என்று பதிலளித்த சாவித்திரியிடம், "தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைக் கேள்... உன் கணவனின் உயிர் தவிர...' என்றான் எமன்.
"என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும்; அவரது நாடு மீட்கப்பட வேண்டும்... என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை; அவருக்கு, நூறு குழந்தைகள் வேண்டும்...' என்றாள் சாவித்திரி. எமன் அந்த வரத்தைத் தந்து, "இனி போய் விடு!' என்றான். சாவித்திரி பின் தொடர்ந்தாள்.
"உமக்கு தர்ம ராஜா என்று பெயர் உண்டு. தர்மவான்களுடன் உறவு கொண்டால் பலனளிக்காமல் போகாது. உம்முடன் சிறிது நேரம் நட்பு கொண்ட எனக்கும், அதற்குரிய பலன் உண்டல்லவா?' என்ற சாவித்திரியின் பேச்சைக் கேட்ட எமன், மேலும் சில வரங்களைக் கேட்கச் சொன்னான்.
"எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்...' என்றாள் அவள்.
அவளது சமயோசிதத்தை பாராட்டிய எமன், கணவனின் உயிரைத் திருப்பித் தந்தான். நூறு குழந்தைகள் வேண்டுமென கேட்டதன் மூலம், சத்தியவானும், சாவித்திரியின் தந்தையும் நானூறு ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றனர்.
இதன் காரணமாகத்தான், சாவித்திரியின் கதையைக் கேட்பவர்கள் தீர்க்காயுளுடன் இருப்பர் என்று கூறுவர்.
கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குத்தி எடுத்த அரிசியை மாவாக்கி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடை செய்ய வேண்டும். இதை திருவிளக்கின் முன் வைத்து, விளக்கை சாவித்திரி யாக கருதி வழிபட வேண்டும். இதனால் தான் இந்த விரதத்துக்கு, "காரடையான் நோன்பு' என பெயர் வந்தது.
சாவித்திரியின் கதை கேட்ட பெண்கள், தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

No comments: