கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க..

வியர்வை, வேர்க்குரு, எண்ணெய் பிசுபிசுப்பு, முகப்பரு, வறண்ட சருமம் என்று பளிங்கு போன்ற சருமத்தையும் சம்மர் பாழாக்கி விடும். இப்படிப்பட்ட சம்மரிலும் நீங்கள் அழகாக ஜொலிக்கவும், சூரியனே உங்கள் அழகைக் கண்டு வெட்கப்படவும் இதோ சம்மர் பியூட்டி டிப்ஸ். 
கோடைக்காலங்களில் சிலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதற்கு பாலேட்டில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால், முகம் ஈரப்பதமாகவும், வழுவழுப்பாகவும் மாறும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் பாலேடு உபயோகப்படுத்தக் கூடாது.
வியர்வை அதிகமாக உள்ள பெண்கள் சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் பூசி வந்தாலே போதும்.
வெயிலாலும், கவரிங் நகைகளை அணிவதாலும் சிலருக்கு கழுத்து மட்டும் கறுத்துவிடும். இதற்கு கோதுமை, ஓட்ஸ், பாசிப்பயிறு மாவு மூன்றையும் பாலுடன் கலந்து கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவி வந்தால் கறுமை படிப்படியாக மறைந்துவிடும்.
வேர்க்குரு பிரச்சினையுள்ளவர்கள், நீரில் சிறிது சந்தனம் கரைத்து அந்த இடங்களில் தடவி வந்தால் வேர்க்குரு ஓடியே போச்.
கோடைக்காலத்தில் சருமம் கருத்துப் போனால், இரவில் கசகசாவை பாலில் ஊறவைத்து அதைக் காலையில் அரைத்து உடம்பில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளித்து வந்தால் சருமம் நிறமாகவும், பள பளப்பாகவும் மாறும்.
பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து அதை முகத்தில் பூசிவர, முகத்திலுள்ள இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும்.
வெள்ளரிப் பிஞ்சு மற்றும் உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி கண்ணின் மேல் வைத்தால் இந்த கொளுத்தும் வெயிலில் கண்களுக்கும் குளிர்ச்சி. தவிர நாட்பட்ட கறு வளையம் நீங்கிவிடும்.
தர்ப்பூசணியின் அடிப்பகுதியை முகம், உடம்பு, கை, கால்கள் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர சம்மரில் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து புதுப்பொலிவு உண்டாகும்.
தலைமுடிக்கு:
பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்.
வேப்பிலை, துளசி, புதினா மூன்றையும் நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை போய்விடும்.
மருதாணி, டீ டிகாஷன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன் முடிக்கும் நல்ல வலு கிடைக்கும்.
வெயில் காலங்களில் முடி வறண்டு காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி இலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் தேவையான அளவில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிக்க வேண்டும். இதனால் முடி உலர்ந்து போகாமல் இருப்பதோடு பொடுகுத் தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் 4 டீஸ்பூன் அளவு எடுத்து மிதமாக சூடாக்கி தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்த்த பின்னர் வெந்நீரில் டவலை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டினால் கூந்தல் வறட்சியின்றி காணப்படுவதோடு, முடியும் செழித்து வளரும்.
கோடைக்காலங்களில் தலை சருமம் வறண்டு காணப்படுபவர்கள் வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில் ஊற வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் சாஃப்ட்டாக மாறும்.
கழுத்து:
தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும்.
கழுத்துப் பகுதி கருப்பாக உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தமாவு நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நாளடைவில் அந்த கறுப்பு நீங்கிவிடும்.
முகம்:
பெண்கள் கோடைக் காலத்தில் வெளியில் செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பிறகும் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி Refreshing Lotion வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். அதோடு முகத்தில் அழுக்கும் சேர வாய்ப்பே இருக்காது.
முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும் பெண்கள், தேங்காய்த் தண்ணீரை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைத்து வந்தால், முகத்தில் உள்ள தூசு, அழுக்கு, எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிங்கு போல் ஜொலிக்கும்.
கோடைக்காலங்களில் வெப்பத்தின் கொடூரத்தன்மை அதிகமாக இருப்பதால் பெண்களின் முகத்தில் வறட்சி ஏற்பட்டு சுருக்கங்கள் தோன்றுகின்றன. இதைத் தடுக்க வாரத்திற்கு 2 முறை முட்டையின் மஞ்சள் கருவுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.
சிலருக்கு முகத்தில் மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் கருப்பு கருப்பாக மச்சம் போல காணப்படும். இதற்கு சந்தனம், சாதிக்காய், வேப்பங்கொழுந்து இம்மூன்றையும் சமமாக எடுத்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர, அந்த கருமைநிறம் தானே மறைந்துவிடும். முகமும் அழகாகத் தோற்றமளிக்கும்.
உடல் மற்றும் கை, கால்கள்:
கோடைக்காலங்களில் சரும நோய்கள் நம்மை வந்து அண்டாமல் இருக்க இலுப்பை இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தாலே போதும் (இலுப்ப இலைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்).
கோடை காலத்தில் கை, கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாகிவிடும். நன்கு பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை, கால் மற்றும் உடல் முழுவதும் பூசி வர, உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும்.
வெயிலில் செல்லும்போது, குடை அல்லது தொப்பி போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் முகம், உடல், கை, கால்களுக்குப் பாதுகாப்பளிப்பதோடு, சருமத்தில் ஏற்படும் தேவையில்லாத கறுப்பு நிறத்தையும் தவிர்க்கலாம்.
வெயிலில் செல்வதற்கு முன் கை, கால்களில் மாய்ஸ்ரைசிங் க்ரீம், சன் ஸ்கிரீன் லோஷன் ஆகியவற்றைத் தடவிச் சென்றால், வெயிலில் கறுத்துப் போவதைத் தடுக்கலாம்.

No comments: