இதுதான் குடும்பம்; பழகிக் கொண்டு, சகித்துக் கொள்ள வேண்டும்.


செல்வத்தினுள் சிறந்தது, மக்கள் செல்வம் என்றார் வள்ளுவர். மற்ற செல்வங்களை விட, மக்கள் செல்வம் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தன் மகன் குழந்தையாக இருந்த போது, அதன் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வான்; குழந்தை, பால பருவம் வரும் போது, அது தத்தித் தத்தி நடப்பதைக் கண்டு மகிழ்வான்; பிறகு, அவன் பள்ளி சென்று, படித்து, பரீட்சை எழுதி, பாஸ் செய்ததும் மகிழ்வான். அதே பையன், நல்ல உத்யோகம் கிடைத்து, வேலைக்குப் போய், சம்பளம் வாங்கி வருவதைப் பார்த்து மகிழ்வான். அவனுக்கு ஒரு கல்யாணத்தையும் செய்து வைக்கிறான். "இனி, நமக்கு கவலை இல்லை. வீட்டு விவகாரங்களை மகனும், மருமகளும் பார்த்துக் கொள்வர்...' என்று, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
ஆனால், அங்கே தான் இவர்களுக்கு சங்கடம் ஆரம்பமாகிறது. மருமகளுக்கும், மாமியாருக்கும் ஒத்து வருவதில்லை; பையனும், இதை கண்டு கொள்வதில்லை. மனைவியிடம், பெற்றோருக்காக சண்டையிட துணிச்சல் இருக்காது. அதனால், மனைவி சொல்லே மந்திரமாகி விடுகிறது. நாளடைவில், மருமகள் வைத்ததே சட்டம். கணவனிடம் கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாள்... "நாம் தனிக்குடித்தனம் போய் விடலாம் அல்லது உங்க அப்பா, அம்மாவை ¬முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வாருங்கள். அப்படி செய்யாவிட்டால், நான், என் பிறந்த வீட்டுக்குப் போய் விடுவேன்...' என்று பயம் காட்டுகிறாள்.
இவனும், வேறு வழி இல்லாமல் தாய், தகப்பனாரை தாஜா செய்துமுதியோர் இல்லத்தில் சேர்த்து, "அப்பாடா!' என்று வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கே அவனது மாமனாரும், மாமியாரும் வந்து உட்கார்ந்து கொண்டு, "வாங்கோ மாப்ளே... ஏதோ உங்க கூட இரண்டு மாசம் இருந்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம். உங்களுக்கும் ஒத்தாசையா இருக்குமே...' என்பர். இவன், யாரும் பார்க்காத போது, "மடேர்... மடேர்' என்று தலையில் அடித்து, மாமனார், மாமியாருக்கு உபசாரம் செய்வான். பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்த பாவம், மாமனார், மாமியாருக்கு பணிவிடையும், செலவும் செய்ய வேண்டியுள்ளது. இதுதான் குடும்பம்; பழகிக் கொண்டு, சகித்துக் கொள்ள வேண்டும்.

No comments: