அஞ்சாத நெஞ்சம்!-ஏப்., 28 - திருநாவுக்கரசர் குருபூஜை!

பயமில்லாதவன் யார் என்றால், ஆன்மிகவாதி தான் என்பதற்கு, உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்...' என்ற தேவாரப் பாடல் ஒலிக்காத நெஞ்சங்களே இல்லை. இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் இவர். இறைவனை மனதில் நிறுத்தியவன், எமனுக்கு கூட அஞ்ச மாட்டான் என்று அறிவித்தவர். அவரது குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடத்தப்படும்.
விழுப்புரம் அருகிலுள்ள திருவாமூரில் வசித்த தீவிர சிவபக்தரான புகழனார் - மாதினியார் தம்பதிக்கு, திலகவதி என்ற மகளும், மருள்நீக்கி என்ற மகனும் பிறந்தனர். இருவருக்கும் வயது இடைவெளி அதிகம்; இதனால், தம்பியை, பிள்ளை போல கருதினார் திலகவதி.
திலகவதிக்கும், அந்நாட்டு படைத் தலைவர் கலிப்பகை யாருக்கும் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நடந்த போரில், அவர் கொல்லப்பட்டார். திலகவதியின் தந்தையும், தாயும் இந்த கவலையிலேயே இறந்து விட்டனர். துக்கம் தாளாத திலகவதியும் இறக்க முடிவெடுத் தார். தனிமையில் விடப்பட்ட மருள்நீக்கி, தனக்காக வாழும்படி சகோதரியிடம் கெஞ்சினார். அதனால், மனம் மாறி, இனி, வேறு யாரையும் மணப்பதில்லை என்ற உறுதியுடன், தம்பியை வளர்த்து வந்தார் திலகவதி.
மருள்நீக்கி சிறப்பாக படித்தார். மதப்பூசல் அதிகமாக இருந்த அந்த நேரத்தில், நாடாண்ட மகேந்திர பல்லவன், மக்களை சமண மதத்தைக் கடைபிடிக்க உத்தரவிட்டான். சமணர்கள் மந்திர, தந்திரங்களில் வல்லவர்கள். மருள்நீக்கியின் கல்வியறிவைக் கேள்விப்பட்டனர். அவரது புத்திசாலித்தனம், சமணத்தை வளர்க்க உதவும் என நம்பினர். தங்கள் மதத்தின் சிறப்பை எடுத்துக் கூறினர். மருள்நீக்கியும் சமணத்தில் இணைந்து, "தேவசேனன்' என்று பெயர் மாற்றிக் கொண்டார். சைவத்தில் இருந்து சமணத்துக்கு மாறியதை, திலகவதி ஒப்புக் கொள்ள மறுத்தார்.
தம்பியை மீண்டும் சைவத்துக்கு மாற்ற அவர் எடுத்த முயற்சி, பலன் அளிக்கவில்லை. இதனால், அவர் தம்பியை விட்டு, அருகிலுள்ள ஊருக்கு போய் விட்டார். சிவனை எண்ணி உள்ளமுருகி பாடி, தன் தம்பி மீண்டும் சைவம் திரும்ப வேண்டினார். ஒருநாள், சிவன், அவரது கனவில் தோன்றி, "<உன் தம்பிக்கு கடும் வயிற்றுவலியைக் கொடுத்து, சைவத்திற்கு திரும்பச் செய்வேன்...' என உறுதியளித்தார்.
அதன்படி, தேவசேனனுக்கு வலி ஏற்பட, சமணர்கள் செய்த மந்திர சிகிச்சை பலன் தரவில்லை. வலி தாளாமல் சகோதரியை தேடி ஓடினார். அவரை, சிவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் திலகவதி. கோவிலுக்குள் நுழைந்ததுமே வலி நீங்கியது; உடனே, பல பாடல்களைப் பாடினார். சைவத்துக்கு மாறி, பழைய பெயரையே வைத்துக் கொண்டார்.
இதையறிந்து, மன்னரிடம் முறையிட்டனர் சமணர்கள். "தேவசேனன் வயிற்றுவலி வந்தது போலவும், எங்கள் மந்திரங்களால் குணமாகாதது போலவும், சிவன் கோவிலுக்கு சென்றதும் குணமாகி விட்டது போலவும் நாடகமாடுகிறான். சைவ மதமே சிறந்தது என்று காட்ட முயற்சிக்கிறான்...' என்று புகார் கூறினர்.
அவரை அழைத்து வர உத்தரவிட்டான் மன்னர்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்...' என்ற பாடலைப் பாடி, "நான் உங்கள் அரசனுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. சிவனுக்கு மட்டுமே அடிமை; அங்கு வர முடியாது. இதனால், எனக்கு மரணதண்டனை தந்தாலும் பரவாயில்லை...' என்ற ரீதியில் பாடல் அமைந்தது. கோபமடைந்த அரசன், நேரில் வந்து, அவரை சுண்ணாம்பு காளவாசலில் வைத்து கொல்ல முயன்றான்; காளவாசல் குளிர்ந்து விட்டது. விஷம் கொடுத்தான்; அதுவும், அவரைக் கொல்லவில்லை. கல்லைக் கட்டி கடலில் வீசினான்; அவர் மூழ்கவில்லை. மன்னரே பயந்து போனார். அதன்பின், மன்னரும் சைவத்தை தழுவினான்.
இவரது இனிய பாடல்களால், "நாவுக்கரசர்' என்ற பெயர் இவருக்கு அமைந்தது.
தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூர் அப்பூதி அடிகள், நாவுக்கரசரின் புகழைப் கேள்விப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு பெரிய திருநாவுக்கரசு, சின்ன திருநாவுக்கரசு என்று பெயரிட்டார். மூத்தவனை பாம்பு கடித்த போது, அவனை பிழைக்க வைத்தார் நாவுக்கரசர்.
திருநாவுக்கரசரின் தேவாரம் படித்து, அஞ்சாநெஞ்சம் பெறுவோம்..

No comments: