தலையில் பொடுகு வராமல் தடுக்க வழிமுறைகள்!

பொடுகு என்றால் என்ன?
பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.
சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கும் இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் பரவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். இந்தப் பொடுகை தடுக்காவிட்டால் தலைமுடி அனைத்தும் உதிர ஆரம்பிக்கும்.

பொடுகு எல்லாக் காலங்களிலும் இருக்குமென்றாலும் மழை மற்றும் பனிக்காலங்களில் தான் அதிகம் காணப்படும். இந்த காலகட்டத்தில் பொடுகை அடியோடு ஒழித்துக்கட்ட இங்கே நிறைய வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. அதில் தங்களுடைய உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் முறைகளைப் பின்பற்றி பயனடையுங்கள்.
பொடுகு வராமல் தடுக்க:
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.
நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.
பொடுகினை அழிக்க:
பொடுகினை முற்றிலுமாக ஒழிக்க  இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.
வேப்பிலை  2 கைப்பிடி
நல்ல மிளகு  1520
இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது.
அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.
நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.
வெள்ளை மிளகு  4 டீ ஸ்பூன்
வெந்தயம்  2 டீ ஸ்பூன்
இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்துத் தலைக்கு பேக் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு நீங்கி தலைமுடி நீண்டு வளரும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.
தேங்காய் பால்  1/2 கப்
எலுமிச்சை சாறு  4 டீ ஸ்பூன்
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது
இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்

No comments: