பக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் !



ஈஸ்வரனிடம் பக்தி செய்வதில் பல விதங்களைச் சொல்லி இருக்கின்றனர். தன் புருஷனிடம் எவ்வளவு பக்தியும், பிரேமையும் ஒரு பதிவிரதை வைத்திருக்கிறாளோ, அதேபோல், ஈசனிடத்திலும் ஒரு பதி விரதை போல், பக்தியோடு இருப்பான் பக்தன் என்றனர். இங்கு புருஷன் என்று சொல்லக் கூடியவர், விஷ்ணு அல்லது நாராயணன் எனப்படும் ஒருவரே. மற்ற எல்லாரும் புருஷர்கள் போலிருந்தாலும், ஸ்த்ரீகள் தாம் என்று சொல்லப்பட்டுள்ளது. பகவானை, புருஷனாக எண்ணி பக்தியும், வழிபாடும் செய்யச் சொல்லி இருக்கிறது.
அந்த அளவுக்கு ஞானம் ஏற்பட வேண்டும். நம்மில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அந்த மகா புருஷனுக்கு முன் யாவரும் பெண்களே! மீராபாய் சரித்திரம் எல்லாருக்கும் தெரியும். பக்திக்கு ஒரு மீரா என்பர். அவள் பிருந்தா வனத்தில், கிரிதர கோபாலனை சதா பூஜித்து வந்தாள். வட தேசத்து ஆசார்யர்களில் வல்லபாச்சார்யார் ஒருவர். ஒரு சமயம், பிருந்தாவனத்துக்கு வந்தார். அவரை தரிசனம் செய்ய விரும்புவதாக சொல்லி அனுப்பினாள் மீராபாய். அதற்கு அவர், "நான் ஸ்த்ரீகளைப் பார்ப்பதில்லை...' என்று மறுத்து விட்டார். "இந்த பிருந்தாவனத்தில் புருஷன் ஒருவன் தான்; அவன் தான் கிருஷ்ணன்; அவனைத் தவிர பாக்கி எல்லாருமே ஸ்த்ரீகள் தாம். வேறு புருஷர்களும் இங்கே வரக்கூடாது. ஆகவே, இவருக்கு தாம், "புருஷன்' என்ற எண்ணம் இருக்குமாயின் உடனே, இந்த எல்லையை விட்டு வெளியேறும்படி சொல்...' என்று சொல்லி அனுப்பினாள் மீராபாய். அதைக் கேட்டவுடன் திடுக்கிட்டார் வல்லபாச்சார்யார். "அடடா... இவள் உத்தமமான ஞானி என்று நினைக்கிறேன். நாராயணன் ஒருவனே புருஷன் என்று சொல்லப்பட்டுள்ளது. அதை, இவள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறாள். நாம் இவளிடம் அவசரப்பட்டு விட்டோமே...' என்று வருந்தி, ஓடிப் போய் அவளுக்கு நமஸ்காரம் செய்தார். பகவானைத் தவிர மற்ற எல்லாரும் ஸ்த்ரீகள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. பல ஆழ்வார்கள் கூட பகவானிடம் நாயகி பாவத்தில் பக்தி செய்து, அவனை நாயகனாக வைத்து பாசுரங்கள் செய்திருக்கின்றனர். நாயகன் - நாயகி பாவம் இதில் காணப்படுகிறது. மற்றும் சில பக்தர்கள் பகவானை குழந்தையாகவும், நண்பனாகவும் பாடி போற்றியிருக்கின்றனர். எப்படி எண்ணினாலும், பகவானுக்கு பக்தி தான் முக்கியம். "பாவம்... எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். என்னிடம் பக்தி வைத்திருக்கிறானா... அவனுக்கு மோட்சத்தை கொடு...' என்கிறான் பகவான்!

No comments: