"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள் ?


இது முரண்பாடு என்று நினைக்காதீர்; இதுதான் உண்மையும் கூட. ஜுரம், தலைவலி போன்றவை, மருந்து சாப்பிட்ட பின் குணமாகி விடும். ஆனால், சில வியாதிகள், நம்மோடு இருந்து கொண்டே இருக்கும். அது போன்ற வியாதிகள், நம் இறுதி நாட்கள் வரை நம்முடனே இருக்கும்.

உதாரணம்: சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு. இந்த இரண்டும் வந்தால், இதோடு தான் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும். ஒவ்வொரு வியாதிக்கும், ஒரு சரித்திரம் உண்டு. இந்த வியாதி இப்படி தான் இருக்கும்; இப்படி தான் முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்குள் பல விளைவுகளை, சிக்கல்களை உண்டாக்கி, பல தொல்லைகளை, தொந்தரவுகளை கொடுத்து, சில நேரங்களில் உயிரையே எடுத்து விடும்.
சர்க்கரை வியாதி இன்று, இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு உள்ளது. இதை சரியாக கண்டறிந்து வைத்தியம் செய்யாவிட்டால், இதனால் வரும் சிக்கல்கள் பல. ஒவ்வொரு வீட்டிலும், ஒருவராவது சசர்க்கரை நோயால் தாக்கப்படுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடுவது, நாம் சாப்பிடும் உணவு, இரைப்பையில் செரிக்கும் போது, இன்கிரிட்டின் சுரந்து பீட்டா செல்லினை தூண்டி, இன்சுலினை சுரக்க வைத்து, ரத்தத்திலுள்ள குளூக்கோசை கட்டுப்படுத்துகிறது; ஆல்பா செல்லில் குளூகோகான் (Glucogon) சுரக்கிறது. இந்த குளூகோகான், ரத்தத்தில் குளூக்கோஸ் குறையும் போது, கல்லீரலில் இருந்து குளூக்கோசை சுரக்க செய்கிறது. இந்த இரண்டும் தராசு தட்டு போல், சரிசமமாக சுரந்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுகிறது. இன்சுலின், சர்க்கரையை கரைத்து, உடலிலுள்ள செல்களுக்கு சக்தியை கொடுக்கிறது. சோர்வடைந்த சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்ட பின் அல்லது மாத்திரை சாப்பிட்டவுடன் புத்துணர்வு பெறுகின்றனர். சர்க்கரையின் அளவு, வெறும் வயிற்றில் 40 முதல் 110 சதவீதம் வரை இருக்கும். சாப்பிட்டவுடன், ஒன்றரை மணி நேரம் கழித்து, 40 சதவீதத்திற்குள் இருக்கும். இது காலை நேரத்தில் தான் பார்க்க முடியும். ஆனால், சர்க்கரையின் அளவு ஒரு நோயாளிக்கு, நாள் ஒன்றுக்கு எட்டு தடவை ஏறி இறங்குகிறது. ஆகையால், இன்று உலக ஆய்வாளர்கள் ரத்தத்தின் சிவப்பு அணுவிலுள்ள ஹீமோகுளோபினில் இருக்கும் HBA1c என்ற அளவு துல்லியமானது என கண்டறிந்துள்ளனர். இது மூன்று மாதம் வரை மாறாது. இது 6 முதல் 6.5 சதவீதத்திற்குள் இருந்தால், சர்க்கரை நோய் இல்லை என்று பொருள். அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய் உள்ளது என்று பொருள். சர்க்கரை நோய், தலையில் உள்ள முடி முதல், பாத நகம் வரை தாக்கும். இந்நோயின் குணம், ரத்த குழாயின் உட்சுவர், நடுச்சுவரை தாக்கி, டயபடிக் ஆஞ்சியோபதி என்ற வியாதியை உண்டாக்கும். இந்த டயபடிக் ஆஞ்சியோபதி, கண்ணுக்கு தெரிந்த பெரிய ரத்தக்குழாய் முதல், கண்ணுக்கு தெரியாத மைக்ரோ ஆஞ்சியோபதி என்ற வியாதியை உண்டாக்கிவிடும். இதனால், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிப்படைந்து, வாதம், பக்கவாதம் வரும். இதயத்திற்கு ரத்தத்தை கொடுக்கும் கரோனரி ரத்தக்குழாயை அடைத்து, மார்பு வலி, மாரடைப்பு ஏற்படுத்தும். இதனால், சிறுநீரகம் பாதிப்படையலாம். அறியாமை, ஏழ்மை நிறைந்த நம்நாட்டில், தனக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதே, 30 சதவீதம் மக்களுக்கு தெரியாது. அப்படி கூறினாலும், பெரும்பாலோர் இதை நம்ப மறுத்து, சிகிச்சை இல்லாமல் வாழ்ந்து, விளைவுகளை கண்டதும் ஓடி ஒளிகின்றனர். அந்நேரத்தில் தகுந்த, சிறப்பு மருத்துவரை சந்தித்திருந்தால், நோய் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். ரத்த அழுத்த நோய் இன்று, நாகரிக உலகத்தின் வியாதியாகி விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன், 45, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் இந்த வியாதி வரும். இன்று, 20 முதல் 30 வயது இளைஞர்கள், பெண்களுக்கு வருவதை பார்க்கிறோம். மனிதனுக்கு ரத்த அழுத்தம், சாதாரணமாக, 120 சிஸ்டாலிக், 80 டயஸ்டாலிக் இருக்கும். இது முக்கியமாக, உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்தம் கிடைக்க உதவுகிறது. இது குறைந்தாலோ அல்லது உயர்ந்தாலோ, உடல் திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காது. இதனால், பல குறைகள் தெரியும். கருவுற்ற தாயின் ரத்தக்குழாய் சிறுத்து, குழந்தைக்கு ரத்தம் குறைந்து, இளைத்து ஆபத்தாகலாம். மூட்டுகள் தேய்மானம், வயது ஆக ஆக இரண்டு முட்டி எலும்புகளுக்கும் இடையே ஜவ்வு தேய்ந்து, அசைவு ஏற்படும் போது, இரண்டு எலும்பும் மோதி, கடுமையான வலி வரலாம். கண்ணில், "கேட்டரேக்ட்' என்ற புரை ஏற்பட்டு பார்வை குறையலாம். "புராஸ்டிரேட்' என்ற மூத்திரக்காய் தடித்து, சிறுநீரக அடைப்பு ஏற்படலாம். இவை அனைத்தும், மனித இனத்திற்கு வரும் வியாதிகள். இந்த வியாதிகள் வராமல் தடுக்க, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நல்ல உணவு வகைகள், யோகா ஆகியவற்றின் மூலம், வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். யோக பயிற்சி, தியானம், இவற்றைக் குறைக்கும். ரத்த அழுத்தம் அதிகமாவதால், ரத்த குழாய் தடித்து, விட்டம் சுருங்கி விடுகிறது. "ஆர்ட்டிரியோ குளோரிஸ்' என்ற வியாதி ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதித்து, "ஸ்ட்ரோக்' வருகிறது. கண்ணின் ரெட்டினா பகுதியில் ரத்தக்குழாய் தடித்து, ரெட்டினோபதி வரலாம்.
சிறுநீரக ரத்தக்குழாய் தடித்து, சிறுநீரக கோளாறு ஏற்படலாம். மகாதமனி தடித்து, பெருத்து, "அனோரிசம்' ஏற்படலாம். ஆண் <உறுப்பு ரத்தக்குழாய் சுருங்கி, ஆண்மை விரைப்பு தன்மை குறையலாம். கால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு கால்வலி வரலாம். சர்க்கரை நோயைக் கண்டறிந்து, நோயின் தன்மை, எவ்வளவு மாதம், வருடம் என்று தெரிந்து, வியாதியின் விளைவுகளை கண்டறிந்து, சிகிச்சைப் பெற்று நலமுடன் வாழலாம். தினமும் மாத்திரை, மருந்து, உணவுக் கட்டுப்பாடு இவைகளால், நோயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, நலமுடன் வாழலாம்.
உதாரணம்: அரசு அலுவலர் 45 வயதில், "டயாபடிக்' நோயை கண்டுபிடித்து, சீரான பரிசோதனை, மருந்து, மருத்துவ ஆலோசனை என்று எவ்வித விளைவுகள் இன்றி, 75 வயதில் நலமுடன் இருக்கிறார். கற்பகம் என்ற 20 வயது பெண் தன்னிடம், "மைட்டிரல் வால்வு' சுருக்க நோய்க்கு பலூன் சிகிச்சை பெற்று, பின் இரண்டு குழந்தைகள் பெற்று, 23 வருடங்கள் கழித்து, 43 வயதில் பரிசோதனைக்கு வந்தார். ராமர் என்ற சேலத்து வாத்தியாருக்கு, 50 வயதான போது, இதய ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் ஏற்பட்டன. அறுவை சிகிச்சையைத் தவிர்த்து விட்டு, தொடர் மருந்து உட்கொள்ளுதல், வாழ்க்கை முறையை சீராக மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கடைபிடித்து, தற்போது 25 ஆண்டுகளுக்குப் பின்னும், ஆரோக்கியமாக வாழ்கிறார். நெல்லூரில் ஒரு ரெட்டியார், 20 ஆண்டுகளுக்கு முன், 62 வயதில், பை-பாஸ் செய்து நன்றாக வாழ்ந்து வருகிறார். இன்று, 82 வயதிலும் பரிசோதனைக்கு வருகிறார். இது போல் பலரும், பை-பாஸ் செய்து கொண்டு, 10, 15, 20 ஆண்டுகளாக பரிசோதனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்னும் நலமுடன் வாழ்கின்றனர். இவர்களுக்கு நோயுண்டு; ஆனால், நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு மருந்து, வாழ்க்கை முறையில் மாற்றம், ஒழுக்கம் கொண்டு, மருந்துகள் உதவியுடன், நோயினை கட்டுக்குள் வைக்கின்றனர். "நோய் இல்லை; ஆனா இருக்கு...' என சொல்பவர்களில் பெரும்பாலோர், பெண்கள். காரணம், மனிதன், பெண் இனத்தை தாழ்வாக, இரண்டாம் வகை இனமாக நடத்தும் மனோபாவம் தான். குடும்பப் பெண்கள் தாங்கள் அன்றாடம் செய்து வரும் அதிகப்படியான வேலை மற்றும் பொறுப்புகளால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வலி, படபடப்பு, மூச்சு இரைப்பு என்று பல தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு, சிறிய குறைகளை கூட பெரிதாக்கி, நோயாளியாகி விடுகின்றனர். இப்படி குடும்ப பெண்கள் ஒருபுறம் இருக்க, வேலைக்கு செல்லும் பெண்கள், இதற்கு மேலாக கஷ்டப்பட்டு, "நியூரோசிஸ்' ஏற்பட்டு, நெஞ்சு வலி வந்தால், "கார்டியாக் நிரோசிஸ்' என்ற நோயையும் பெறுகின்றனர். ஆண்களும் இதில் அடங்குவர். 10 சதவீதம் ஆண்கள், வீடு, ஆபீஸ் முதலிய இடங்களில் ஏற்படும் ஒவ்வாத சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு, நோயோடு வாழ்கின்றனர். ஆடம்பரத்தையும், அதிக பொருளையும் தேடி போனால், அமைதியான குடும்பம் கெடும். எளிமையும், எல்லாரையும் நேசிப்பதும், மன அமைதியையும், குடும்ப அமைதியையும் தரும்.

No comments: