நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி! (அர்த்தமுள்ள இந்துமதம் -கவியரசு கண்ணதாசன் )

பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ள முற்று
நீச்சுநிலை காணாமல் நிற்கும்நாள் எந்நாளோ!
இப்படி, சாவை அழைக்கவில்லை தாயுமானவர்;
எல்லாம் கடந்த பேரின்ப நிலையை அழைக்கிறார்.
சர்வாங்கமும் ஒருமுகமாகி இன்ப துன்பங்களைக் கடந்து நிற்கும் நிலையே பேரின்ப நிலையாகும்.

புலன்களும் பொறிகளும் மனிதனுக்குள் உள்ளவையே.
அவற்றைக் கட்டுப்படுத்த மனிதனால் முடியும் என்பது நமது ஞானிகளின் வாதம்.
சமயத் துறையின் மூலம் அதனைச் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் காட்டினார்கள்.
சராசரி மனிதன் புற உணர்ச்சிகளால் அகவுணர்ச்சி பாதிக்கப்படுகிறான்.
அகவுணர்ச்சியின் பாதிப்பால் புறத் தோற்றத்திலும் மாறுதலடைகிறான்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
என்றார் வள்ளுவர்.
இப்படி மனத்தால் உடலும் உடலால் மனமும் பாதிக்கப்படுவதிலிருந்து நீங்கி, பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ளத்தைக் காண விழைகிறார் தாயுமானவர்.
துன்பங்களிலிருந்து விடுபட, நமது சித்தர்களும் ஞானிகளும் சொல்லிப்போன வழிகள் ஏராளம்.
பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை.
அந்தப் பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை, பயிற்சியின் மூலமும் அனுபவங்களின் மூலமும் வரும்.
நான் முன் கட்டுரைகளில் சொன்னபடி ஒவ்வொரு துன்பத்திற்கும் மூலமிருக்கிறது.
ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே அது.
அது போன ஜென்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்; இப்பிறப்பில், ஒரு கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு எதிரொலியாகவும் இருக்கலாம்.
காலிலே ஒரு முள் குத்துவதற்குக் கூட உனக்கு விதிக்கப்பட்ட விதி காரணமாக இருக்கிறது.
ஆகவே துன்பம் எத்தகையதாயினும், அது நீயே உண்டாக்கிக் கொண்டதாயினும், உன்னை உண்டாக்கும்படி தூண்டிய சக்தி ஒன்றிருக்கிறது.
அந்த சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது.
``எல்லாத் துன்பங்களுக்கும் விதி காரணமென்றால் நிலையானதும் நிரந்தரமானதுமான அந்த விதி, பிரார்த்தனையின் மூலம் எப்படி மாறிவிடும்!'' என்று ஒருவர் கேட்கிறார்.
ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை அணை கட்டி நிறுத்துவதுபோல், பிரார்த்தனை துயரங்களை நிறுத்துகிறது.
இயற்கையாகவே, அது ஒரு மனச் சாந்தியை உண்டாக்குகிறது.   துன்பம் ஓரளவு குறைந்தாலும், பிரார்த்தனை பலனுள்ளதாகத் தோன்றுகிறது.
நீ நம்பிக்கை வைக்கின்ற டாக்டர் மருந்துக்குப் பதிலாக வெறும் தண்ணீரையே ஊசி மூலம் ஏற்றினாலும் நோய் குறைந்துவிட்டது போல உனக்குத் தோன்றுகிறது.
அது தோன்றுவதுதான் முக்கியம்.
அது தோன்றுவதற்கு நம்பிக்கைதான் பிரதானம்.
மருந்து பாதி, மன நம்பிக்கை பாதி!
பிரார்த்தனை பாதி, நம்பிக்கை பாதி!
நம்பிக்கையோடு பிரார்த்தித்தால், விதியின் வேகம் குறைந்து விட்டதாக உனக்கே தோன்றுகிறது.
விரோதித்து நின்ற விதி, ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது.
`கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்று, ஒரு வரியில் சொல்லி வைத்தார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
நம்பிக்கையே வெற்றிக்கும் நிம்மதிக்கும் அடிப்படை.
ஆதி மனிதன், கடலைக்கண்டு பயந்தான்.
அடுத்த மனிதன், கொஞ்ச தூரம் கடலுக்குள் நடந்து பார்த்தான்.
அவனுக்கு அடுத்தவன், நீந்திப் பார்த்தான்.
இன்னொருவன் கட்டையைப் பிடித்துக் கொண்டு பயணம் போனான்.
கட்டை, படகு ஆயிற்று; படகு கப்பலாயிற்று; பயணம் சுலபமாயிற்று.
கடலும் கடக்கக்கூடியதே என்ற நம்பிக்கை வந்தது.
உலகம் உருண்டை என்ற உண்மையும் தெரிந்தது.
விமானத்தின் பறக்கும் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சங் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டே போன மனிதன், சந்திரமண்டலம் வரை பயணம் போகலாம் என்ற நம்பிக்கை கொண்டான்.
அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
பையன் ஒழுங்காகப் படிப்பான் என்ற நம்பிக்கையால் தான், அவனை வெளிரில் படிக்க வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார் தந்தை.
மனைவியைப் பிரிந்து வாணிபத்திற்காக வெளிர் போகிறவன், திரும்பி வரும்வரை மனைவி பத்தினியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில்தான் போகிறான்.
இன்பமும் நிம்மதியும் நம்பிக்கையில்தான் தோன்றுகின்றன.
நான் கடவுளிடம் நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை.
அதிலும் ஒருவனையே பற்றி நிற்பது என்ற முடிவு கட்டிக்கொண்டு `சிக்கெனப் பிடித்தேன் தேவனே உன்னை' என்று கண்ணனைப் பற்றி நிற்பது, பலனளித்தது.
சிலருக்கு சக்தி நம்பிக்கை பலம் தருகிறது.
சிலருக்கு சிவ நம்பிக்கை.
சிலருக்கு முருக நம்பிக்கை.
இன்னும் எத்தனையோ!
நீ நல்ல தொழிலாளியாக இருந்தால், மோசமான முதலாளிகூட உன்னிடம் அன்பு காட்டுகிறான்; கருணை காட்டுகிறான்.
நீ நம்பிக்கையுள்ள பக்தனாக இருந்தால் குட்டித்தேவதைகள் கூட உன்னை ரட்சிக்கின்றன.
துன்பங்களைக் களைவதற்கு நம்பிக்கையே முக்கியம்.
முதன் முதலில் ஒரு பத்திரிகையில் போய் நான் சேர்ந்தபோது, ``உனக்கு புரூப் பார்க்கத் தெரியுமா?'' என்று கேட்டார்கள்.    உண்மையில் எனக்குத் தெரியாது.
துணிந்து `தெரியும்' என்று கூறி விட்டேன்.
அதற்கொன்றும் `டிப்ளமா' தேவையில்லையே!
நேரே அச்சகத்திற்குப் போனேன்.
முன்பு திருத்தப்பட்ட புரூப்புகளைப் பார்த்தேன்.
உடனே நானும் திருத்த ஆரம்பித்துவிட்டேன்.
அந்தக் கலையில் எனக்கு வெகுநாளாகப் பயிற்சி இருப்பதுபோல் பத்திரிகையாளருக்குத் தோன்றிற்று.
பிறகு, ``தலையங்கம் எழுதத் தெரியுமா?'' என்றார்கள்.
``தெரியும்'' என்றேன்; எழுதிவிட்டேன்!
``அற்புதம்! அற்புதம்!'' என்றார்கள்.
அதன் பலன் ஆசிரியருக்கு வேலை போய்விட்டது; நான் ஆசிரியனாகி விட்டேன்!
எதிலுமே நம்பிக்கை பலன் தருகிறது என்றால், அத் துன்பங்களைக் களையத் தெய்வநம்பிக்கை பலன் தராதா?
``நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு'' என்றார்கள்.
உண்மையில், நம்பிக்கை என்பது இயற்கையாகவோ செயற்கையாகவோ வெற்றி பெற்று விட்டது போல் தோற்றமளித்து, நிம்மதியைத் தருகிறது.
சீதை இலங்கையிலிருந்தபோது, `ராமன் வருவான்' என்று நம்பினாள்.
ராமனும், `சீதையைக் காண்போம்' என்று நம்பினான். ராவணனும் `ராமன் வரத்தான் போகிறான்' என்று எதிர்பார்த்தான்.
அந்த நம்பிக்கை ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்ததாலே ஏற்பட்ட நம்பிக்கை.
தெய்வத்தை நம்பும்போது அறிந்து நம்பவேண்டும்.
ஏதோ கஷ்டம் வந்துவிட்டது, கோவிலுக்குப் போய் வருவோம் என்று போய் வருவதில் அர்த்தமில்லை.
அறிவு ஒரு சக்தியின் மீது லயித்து நம்பிக்கை உதயமாக வேண்டும்.
அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை.
`இந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்' என்று உனக்கே தோன்றி, அந்த லயத்தில் நம்பிக்கை பிறக்கவேண்டும்.
உலகத்தில் பகுத்து அறியவேண்டிய விஷயங்கள் சில உண்டு.
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு.
மனைவியின் உள்ளத்தை நீ பகுத்தறிய முயலலாம்.
உடலைப் பகுத்தறிய முயன்றால், அவள் அழகு தெரியாது. எலும்பும் சதையுந்தான் தோன்றும்.
ஸ்தூலங்களைப் பகுத்தறிந்தால் அவை வெறும் கல்லும் செம்புமாகத் தோன்றும்.
அப்படியே ஏற்றுக்கொண்டால், அந்த சக்தி உன்னை ஆகர்ஷிக்கும்.
நம்பிக்கை கொண்டவர்களை அந்தச் சக்தி எப்படியும் ஒரு கட்டத்தில் வாழவைக்கும்.
மனிதனின் பலவீனமான மனத்தை அறிந்துதான் இந்துக்கள் நம்பிக்கையோடு வழிபடுவதை வற்புறுத்தினார்கள்.
எத்தகைய துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்கு வழி சொன்னார்கள்.
ஒவ்வொரு சிருஷ்டியிலும் சிக்கல் இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.
அந்தச் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கே ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையை நடத்துகிறது.
ஆகவே, பிரார்த்தனையே ஒரு யோகமாகவும் பயிற்சியாகவும் கொண்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வந்தால், துன்பங்கள் விலகாவிடினும் அவற்றைப் பற்றிய பயம் நீங்கி, நிம்மதி ஏற்பட்டுவிடும்.
நெஞ்சுக்கு நிம்மதி;
ஆண்டவன் சந்நிதி!

No comments: