சர்க்கரை கட்டுப்பாடு அறிய எச்.பி.ஏ1.சி., பரிசோதனை

ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் போதும், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏறும்; பின் படிப்படியாக இறங்கும். உண்ணும் உணவின் அளவை பொறுத்தும், பரிசோதனை செய்யும் நேரத்தை பொறுத்தும் சர்க்கரையின் அளவு வேறுபடும். சாப்பிடுவதற்கு முன் 120 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்ட பின் 160 மி.கி.,க்கு கீழும் இருப்பது தான் சர்க்கரை கட்டுப்பாடு. இது ஒவ்வொரு உணவுக்கும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
ஒரு நாளில் மூன்று முறையும், மாதத்தில் 90 முறையும் சர்க்கரை ஏறி, இறங்குகிறது. இந்நிலையில் ஏதாவது ஒரு நாளில் ரத்த பரிசோதனை செய்து விட்டு அந்த முடிவை வைத்து, சர்க்கரையின் அளவு சரியாக உள்ளது, இல்லை என முடிவு செய்வது தவறு. ஒரு நாள் சர்க்கரை கட்டுப்பாட்டிலும், மறுநாள் அதிகமாகவும் இருக்கும் குழப்பத்துக்கு எச்.பி.ஏ1.சி., பரிசோதனை செய்வது தான் தீர்வாகும். இந்த ஒரு பரிசோதனை செய்வது, 270 ரத்த பரிசோதனை செய்வதற்கு சமமாகும். சாதாரணமாக 7 சதவீதத்துக்கு கீழ் இருப்பது தான் சர்க்கரையின் சராசரி அளவாகும். எச்.பி.ஏ1.சி., 7 சதவீதத்துக்கு கீழ் இருந்தால் தான் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதென்று கூறமுடியும். எந்த சிகிச்சை, மாத்திரை என்பதையும் இந்த பரிசோதனையை வைத்து தான் கூற முடியும். பலருக்கு சர்க்கரை நோயால் பின் விளைவுகள் ஏற்பட காரணம் இந்த பரிசோதனை செய்யாதது தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை எச்.பி.ஏ1.சி., பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

-டாக்டர் சேகர், கோயம்புத்தூர்

WordPress.com

No comments: