ஆனந்த பயணத்திற்கு ஆரோக்கிய வழிகாட்டி...சபரிமலை

ஆனந்த சபரிமலை பக்தி பயணம் மீண்டும் களை கட்டத் தொடங்கி விட்டது. அய்யப்ப பக்தர்கள் அணி அணியாய் மலையேறத் தயாராகி விட்டனர். அவர்களது ஆன்மிக பயணம் ஆனந்தமாய் அமைய, ஆரோக்கிய ஆலோசனைகளை தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி வழங்குகிறார்...!
சபரிமலை சன்னிதானம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது? மலை ஏறும்போது பக்தர்கள் கவனத் தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

"சபரிமலை கடல் பரப்பில் இருந்து 467 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. அதிக உயரம் என்பதால் மலையில் மேலே செல்லச்செல்ல ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அந்த பற்றாக்குறையை சமாளிக்க `சாமியே சரணம் ஐயப்பா..' என்று சத்தமாக கோஷம் எழுப்பியபடியே மலை ஏற வேண்டும். அப்படிச் செய்யும் போது கூடுதல் ஆக்சிஜன் உடலுக்குள் செல்லும். வாயைத் திறந்து நன்றாக சுவாசித்தால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மலை ஏறும்போது இதயத்தசைகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், மாரடைப்பு உருவாகக்கூடும். ஆஸ்துமா தொந்தரவு (Wheezing) இருப்பவர்களுக்கும் மலை ஏறும்போது அதிக ஆக்சிஜன் தேவைப்படும்.
மலை ஏறிக்கொண்டிருக்கும்போது சுவாசத்தடை, மார்பு வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மலைப் பகுதியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். உடலில் ஏற்படும் சின்னச்சின்ன அறிகுறிகளைக்கூட அலட்சியம் செய்யக்
கூடாது''
பயணத்திற்கு முன்பு டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லதா?
"பயணத்திற்கு முன்பு ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப டாக்டரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக நல்லது. ஐம்பது வயதைக் கடந்திருந்தாலோ, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்தாலோ அவர்கள் முழு பரிசோதனை செய்து, குடும்ப டாக்டரிடமும் ஆலோசனை பெற்ற பின்பே பயணத்தை மேற்கொள்ள வேண்டும்''
பயணத்தின்போது உடன் வைத்திருக்க வேண்டிய மாத்திரைகள் என்னென்ன?
"எல்லா பக்தர்களும் இருமுடி கட்டோடு `பர்ஸ்ட் எய்டு' பாக்ஸ் ஒன்றை வைத்திருக்க வேண்டும். அதில் வாந்தியை போக்கும் மாத்திரை, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மாத்திரை, காய்ச்சல் மற்றும் உடல் வலிக்குரிய மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். பாண்டேஜ், உடல் வலிக்கான ஸ்பிரே, ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் அதற்குரிய `மாஸ்க்', இன்ஹேலர், இதய நோய் இருப்பவர்கள் அதற்காக டாக்டர் தந்திருக்கும் மாத்திரைகளையும் கொண்டு சென்று, தேவைப்படும்போது உடனடியாக பயன்படுத்த வேண்டும்''
சர்க்கரை நோயாளிகள் மலையேறும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?
"வெறுங்காலோடு மலை ஏற வேண்டும் என்பது ஐதீக நம்பிக்கை. ஆனாலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதற்குரிய செருப்பை அணிந்துகொண்டுதான் மலை ஏறவேண்டும். சிறிய முள் குத்தினால்கூட அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். வழக்கமாகவே சபரிமலை வழிபாட்டு சீசன் முடிந்த பிறகு, காலில் காயத்துடன் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதும் அவதிப்படுவதும் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எதுவும் ஏற்படாத அளவிற்கு அவர்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பயணத்தின்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால், `ஹைப்போக்ளைசீமியா, (Hypoglycemia) என்ற பாதிப்பு ஏற்படும். உடன டியாக அதை சரிசெய்ய வேண்டும். இல்லாவிட் டால் அதன் பாதிப்பு மிக மோசமாகிவிடும். திடீரென்று பசிப்பது பின்பு அதிக வியர்வை வெளியேறுவது, மயக்கம் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறியாகும். சிலருக்கு வலிப்பும் வந்து விடும். சர்க்கரை நோயாளிகள் எப்போதும் சுவீட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனே சுவீட் சாப்பிட வேண்டும் அல்லது குளிர்பானத்தை பருக வேண்டும். இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் பக்தர்கள், பயண காலத்திலும் தவறாமல் இன்சுலினை செலுத்திக்கொள்ள வேண்டும்''
பொதுவாக இந்த பக்தி பயணத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
"பத்து வயதிற்கு கீழும், ஐம்பது வயதிற்கு மேலும் உள்ள பெண்களையே தரிசனத்திற்கு அனுமதிக்கிறார்கள். ஐம்பது வயதைக் கடந்து மனோபாஸ் காலத்தை அடைந்த பெண்களுக்கு இயல்பாகவே எலும்பு பலம் குறையும். `ஆஸ்டியோபோரோசிஸ்' போன்ற எலும்பு பலகீன நோய்கள் அவர்களுக்கு தோன்றும். பெண்கள் கீழே விழுந்துவிட்டால் எலும்பு முறிவு ஏற்படலாம். அதனால் அவர்களை உடனே டோலியின் உதவியோடு அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லவேண்டும். மலை ஏற்றத்தின் போது உடல் தளர்ச்சியோ, அதிக சோர்வோ ஏற்பட்டால் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழம் போன்றவைகளை சாப்பிடலாம். வயதானவர்களுக்கு குளிர்காலத்தில் மூட்டு நோய் (arthritis) பாதிப்பு அதிகம் ஏற்படும். அவர்கள் எப்போதும் அதற்குரிய மருந்து, மாத்திரை களோடு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்''
உணவில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை..?
"பக்தர்கள் உணவில் மிகுந்த கவனம் காட்ட வேண்டும். சுத்தமானதாகவும், சுகாதாரமான இடத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் அவை இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். தெருவோர கடைகளில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான உணவு சாப்பிடாவிட்டால் உணவு விஷத்தன்மையாகி வாந்தி, பேதி ஏற்படும். அது உயிருக்கே கூட ஆபத்தாக ஆகிவிடக்கூடும்.''
மலைப்பகுதியில் பூச்சி, வண்டு தொந்தரவுகள் அதிகம் இருக்குமே?
"அங்கு கொசு, பூச்சி, வண்டு தொந்தரவு இருக்கத் தான் செய்யும். அவை கடித்தாலும் பாதிக்காத அளவிற்குரிய கிரீம் உள்ளது. அதை உடலில் பூசிக்கொள்ளலாம். எல்லா நேரங்களிலும் முழுக்கை சட்டை அணிந்து கொள்ளவேண்டும். கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். கொசு கடிப்பதால் தான் மலேரியா, டெங்கு, யானைக்கால் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது''
மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் மாலை அணிந்ததும் அந்த பழக்கத்தில் இருந்து விடு பட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு பயணத்தின் போது குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏதாவது ஏற்படுமா?
"மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் அதை நிறுத்தும்போது சிலருக்கு `வித்ட்ராயல் சிம்டம்ஸ்' (Withdrawal Symptoms) ஏற்பட்டு உடல் பாதிப்பிற்குள்ளாகும். அதனால் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் பயணத்தில் நோய்வாய்ப்பட்டால் டாக்டரிடம் தனக்கு முன்பு குடிப்பழக்கம் இருந்ததைக்கூறி, சிகிச்சை பெற வேண்டும். வலிப்பு நோய் இருப்பவர்கள் டாக்டர்கள் அனுமதி பெற்றே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு நாள் கூட மருந்து சாப்பிடுவதை தள்ளிப்போடக்கூடாது''
ஆன்மிக பயணத்தின்போது அறிமுகமற்ற நீர்நிலைகளில் பக்தர்கள் குளிக்கிறார்கள். அப்போது அவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?
"பக்தர்கள் ஆற்றில் மிகக் கவனமாக குளிக்க வேண்டும். நீர் நிலைகளில் படகில் பயணம் செய்வதாக இருந்தால் `லைப் ஜாக்கெட்' அணிந்துகொள்ள வேண்டும். அடுத்தவர்கள் `டவலை' பயன்படுத்தக்கூடாது. பொது தொலைபேசி ரிசீவரை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். இருமல், தும்மல் ஏற்படும்போது துணியால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக `4 F 'எனப்படும் FOOT CARE, FOOD CARE, FUN CARE, FLUCARE ஆகியவைகளில் பக்தர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்''
தரிசனம் முடிந்த பின்பு மலையில் இருந்து வேகமாக இறங்கலாமா?
"வேகமாக இறங்கக்கூடாது. மலை ஏறுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறோமோ அதே அளவு நேரத்தை இறங்கவும் எடுத்துக்கொள்ள வேண்டும். செங்குத்தான மலைகளில் ஓடி வேகமாக இறங்கி வந்தால் தசை பிடிப்பு ஏற்பட்டு விடக்கூடும். சபரிமலை பயணம் மட்டுமின்றி திருமலை போன்ற மலைச்சார்ந்த ஆன்மிகப் பயணம், சுற்றுலா மேற்கொண்டாலும் மேற்கண்டவைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கிய பயணமே, முழு ஆனந்தத்தை நமக்கு தரும்''

No comments: