கதிகலங்க வைக்கும் கடற்கொள்ளை பறவை !


அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை, கொள்ளையடிப்பது மனித குலத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று நினைப்பது தவறு. சில காட்டு விலங்கு களும், பறவைகளும் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடு கின்றன. கடலில் பயணிக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளை யடிக்கும் கடற்கொள் ளையர்களைப் போலவே,  ஸ்குவாஸ் என்ற கடற்பறவை, மற்ற பறவைகளின் உணவை வழிமறித்து கொள்ளையடிக்கின்றன.
ஸ்குவாஸ் என்பது, கடலில் வாழும் ஒரு வகை பறவை.  தாக்கும் குணம் கொண்டது. டெர்ன்,  பப்பின் உள்ளிட்ட மற்ற கடற் பறவைகள், தங்களின் குஞ்சுகளுக்கோ அல்லது கூட்டுக்கோ கொண்டு செல்லும் உணவை, இப்பறவை இடைமறித்து கொள்ளை  அடிக்கும்.  வானில் பறந்து கொண்டே சண்டை போட்டு, மற்ற பறவைகளை கொல்லும் இயல்புடையது இப்பறவை. சில நேரங்களில் ஸ்குவாஸ் பறவைகள் ஒன்று சேர்ந்து, மற்ற பறவைகளை துரத்திச் சென்று வேட்டையாடுவதும் உண்டு. இதனால், ஸ்குவாஸ் பறவைகளை கண்டாலே மற்ற கடற்பறவைகள் கதிகலங்குகின்றன. அமெரிக்கா மற்றும் ஆர்ட்டிக் பகுதிகளில் உள்ள ஸ்குவாஸ் பறவைகள், ஒட்டுண்ணி  பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன. முரட்டுத்தனமாக  தாக்குதல் நடத்துவது பெரும்பாலும் விலங்குகளிடம் காணப்படும் குணமாகும். மற்ற உயிரினங்களிடம் இருந்து கொள்ளையிட்டு தின்பதற்கு, "கிளிப்டோபாராசிடிசம்' என்று பெயர்.  ஸ்குவாஸ் பறவைகளில் சில, கொள்ளை அடிப்பதற்காகவே தனியாக வாழ்கின்றன.
ஆர்ட்டிக் பகுதிகளில் வாழும் ஸ்குவாஸ் பறவைகள், பெரும்பாலும் கடலிலேயே வாழும். இனப்பெருக்க காலங்களில் மட்டும் கோடை காலத்தில் கரைக்கு வருகின்றன. ஸ்குவாஸ் குஞ்சுகள் வளர்ந்தாலும் கடலிலேயே இருக்கும். இவை, இனப்பெருக்கத்திற்கு தயாராக இரண்டு ஆண்டுகள் ஆகும்.  பொதுவாக, வேட்டையாடப்படும் உயிரினம், முட்டைகள், சிறிய பறவைகள் ஆகியவற்றையே மற்றவை உணவாக உண்ணும். ஆனால், ஸ்குவாஸ் பறவை சிறிய  விலங்குகள் மற்றும் மீன்களையும் உண்ணும் இயல்புடையது. ஸ்குவாஸ் பறவைகள் நீண்ட தூரம் பறக்க வல்லவை. பெரும்பாலான நேரங்களில், கடல் பகுதிகளில் பறந்து கொண்டிருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ட்டிக் பகுதியில் குளிர் காலம் தொடங்கியதும்,  பூமியின் தென்பகுதிக்கு அவை இடம் பெயர்ந்து விடுகின்றன.

WordPress.com

No comments: