அருந்ததி பார்ப்பது ஏன்?


திருமணமான புதுமணத் தம்பதியர் பின்னிரவில் அருந்ததி பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது.
இது ஏன் தெரியுமா?
வசிஷ்ட முனிவரின் மனைவி பெயர்தான் அருந்ததி. ஒருசமயம் தேவேந்திரன், அருந்ததியிடம் வந்து, "ஒரு குடம் கொண்டு வா. குளத்தில் இருந்தோ, கிணற்றில் இருந்தோ நீர் எடுக்காமல், குடத்தில் நீர் நிரப்பிக் காண்பிக்கிறேன்'' என்றான்.

அருந்ததியும் அவன் சொன்னபடியே குடம் கொண்டு வந்து கொடுத்தாள். தேவேந்திரன், சிறிது நேரம் தியானம் செய்து விட்டுக் குடத்தைப் பார்த்தான். குடத்தில் கால் பாகம் நீர் நிரம்பி இருந்தது.
பிறகு வாயுதேவன் வந்து தியானம் செய்தான். அவரால் அடுத்த கால் பாகம் நீரை மட்டுமே நிரப்ப முடிந்தது.
இதையெல்லாம் கவனித்த அருந்ததி, `எஞ்சிய அரைக் குடத்தை நான் நிரப்பித் தருகிறேன்' என்று கூறி தியானம் செய்யத் தொடங்கினாள். அவள் சொன்னதுபோலவே சிறிது நேரத்தில் குடம் முழுவதும் நீரால் நிரம்பியது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்தான் தேவேந்திரன்.
"தேவர்களால் கூட முடியாத காரியத்தை உன்னால் எப்படி செய்ய முடிந்தது?'' என்று அருந்ததியிடமே கேட்டான்.
"என் கணவரை நினைத்து தியானம் செய்ததால்தான் அது சாத்தியமானது'' என்று பதில் கூறினாள் அருந்ததி.
தேவர்கள் எல்லோரும், அவளது இத்தகைய கற்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டியே நட்சத்திரமாகப் பிறக்கும்படி செய்தனர். அதுமுதல் திருமணம் முடித்த தம்பதியினர், கற்புக்கரசியாக விளங்க அருந்ததி பார்க்க வேண்டும் என்ற வழக்கம் ஏற்பட்டது.

No comments: